ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!
தெஹ்ரான்: உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை தான் கவனித்து வருகிறது, காரணம் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் நிறுத்த தொடர்பான பேச்சுவார்த்தை பாக். தலைநகர் இஸ்லாமாபாத்-ல் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஈரான் தரப்பில் யாரும் வர மாட்டார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் இறுதியாக சனிக்கிழமை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அராக்சி இஸ்லாமாபாத்-க்கு வந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் மையப்புள்ளியே ஹார்முஸ் பாதையை முழுமையாக திறக்க வேண்டும் என்பது தான், ஆனால் ஹார்முஸ் நீரிணையை இனி மீண்டும் முழுமையாகத் திறக்க முடியாத நிலையில் ஈரான் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கண்ணிவெடியால் வந்த பிரச்சனை
ஈரான் தான் வைத்த கடல் கண்ணிவெடிகள் அனைத்தும் முழுமையாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அப்படி கண்டுபிடித்தாலும் அவற்றை அகற்றும் தொழில்நுட்ப திறன் இல்லாததால் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில் இன்று இஸ்லாமாபாத்தில் துவங்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் வழித்தடம்
ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்று. உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவ எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் ஈரான் அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஹார்முஸ் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகளை வைத்தது.
கடல் கண்ணிவெடிகள் வைத்த பிறகு, இந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து மிகவும் குறைந்துவிட்டது. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பின்பும் தற்போது தினமும் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலை உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடல் கண்ணிவெடிகள் எப்படி வைக்கப்பட்டது?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக போர் தொடுத்த உடனேயே, ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் வைத்தது. கண்ணிவெடிகள் மட்டுமின்றி, டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலும் சேர்ந்து ஈரானுக்கு கூடுதல் பலத்தை அளித்தன. இதனால் உலக எரிபொருள் சந்தையில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டதோடு, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரானுக்கு இது ஆயுதமாகவும் பயன்படுத்தும் பலத்தை கொடுத்தது.
ஈரானுக்கு முக்கிய பிரச்சனை
போர் தாக்குதல் துவங்கிய நிலையில் ஈரான், அவசர அவசரமாக சிறிய படகுகளைப் பயன்படுத்தி கண்ணிவெடிகளை ஹார்முஸ் நீரிணையில் விதைத்தது. ஆனால் இந்த வேலை சீரற்ற முறையில் நடந்ததால், கண்ணிவெடி வைக்கப்பட்ட இடத்தை ஈரான் சரியாகப் பதிவு செய்யவில்லை.
சில கண்ணிவெடிகள் பதிவு செய்யப்பட்ட இடத்தில் இல்லாமல் நீரோட்டத்தால் இடம் மாறியிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கண்ணிவெடிகளை முழுமையாகக் கண்டுபிடிப்பதும், அவற்றைப் பாதுகாப்பாக அகற்றுவதும் ஈரானுக்கு மிகவும் கடினமான காரியமாகிவிட்டது.
ஈரான் அறிவித்த புது பாதை
இந்தச் சிக்கல்கள் இருந்த காரணத்தாலேயே, ஈரான் ஒரு குறுகலான பாதையைத் கப்பல் போக்குவரத்துக்காக திறந்து வைத்துள்ளது. இந்தப் பாதை வழியாகக் கப்பல்கள் செல்ல வரி செலுத்த வேண்டும். ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) பாதுகாப்பான பாதைகளைக் காட்டும் வரைபடங்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தப் பாதைகள் சுற்றி கண்ணிவெடிகள் இருக்கும் காரணத்தால் முழுமையான போக்குவரத்தை மீட்டெடுப்பது சாத்தியமில்லை.
புதிய சிக்கல்
பாகிஸ்தானில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரக்சி, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் உடன் பேசியபோது, "தொழில்நுட்ப பிரச்சனைகளை கருத்தில் கொண்டு" ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று தெரிவித்தார். அமெரிக்க அதிகாரிகள் இந்த வார்த்தைகள் கண்ணிவெடி பிரச்சினையையே நேரடியாகக் குறிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்ப சவால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications