ஈராக் பிரதமர் மாற்றம்- புதிய பிரதமரை அறிவித்தார் அதிபர்
பாக்தாத்: ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியை அந்த நாட்டு அதிபர் திடீரென மாற்றி விட்டார். புதிய பிரதமராக, நாடாளுமன்ற சபாநாயகரின் பெயரை அதிபர் அறிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் பிரதமர் மாலிக்கிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அவருக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிபர் பெளத் மஸ்ஸாம்.
இதுகுறித்து ஈராக் அரசு டிவியில் அவர் பேசுகையில், சபாநாயகர் ஹைதர் அல் இபாதி, புதிய பிரதமராக அறிவிக்கப்படுகிறார். அவர் 30 நாட்களுக்குள் புதிய அரசை அமைக்க வேண்டும். அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும் என்றார்.
ஈராக் மக்களைக் காக்கும் அரசை தான் அமைக்கவுள்ளதாக அல் இபாதி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அல் மாலிக்கியின் ஷியா பிரிவு கட்சிதான் பெரும்பாலான இடங்களை வென்றது. இதனால்தான் அல் மாலிக்கி பிரதமரானார். ஆனால் தற்போது அவரை மாற்றியுள்ளதால் புதிய பிரதமருக்கு எப்படி நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்கும் என்று தெரியவில்லை.
இதற்கிடையே அதிபரின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக அல் மாலிக்கி அறிவித்துள்ளார்.