'LED' விளக்கைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீல ஒளியை உமிழும் டயோடுகளை (அதாவது லெட் எனப்படும் LED விளக்குகள்) கண்டுபிடித்ததற்காக இந்தாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற வல்லுனர் ஏற்படுத்திய இந்த பரிசு, அந்த நாட்டை சேர்ந்த நோபல் பரிசு அகாடமி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று தொடங்கியது. இதில் முதலாவதாக மருத்துவ துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மூளை நரம்பு செல் தொடர்பான கண்டுபிடிப்புக்காக, பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானியான ஜான் ஓகீப் மற்றும் நார்வேயை சேர்ந்த மருத்துவ ஆய்வுத்தம்பதியான எட்வர்ட் மோசர், மே-பிரிட் மோசர் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெறுபவர்கள் பெயர் இன்று அறிவிக்கப் பட்டுள்ளது. இப்பரிசையும் மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ ஆகியோருக்கும், அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஷுஜி நகமுராவிற்கும் இந்தப் பரிசு வழங்கப் படுகிறது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத புதிய எரி சக்தியான நீல ஒளியை உமிழும் டயோடுகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். வழக்கமான ஒளியை விட கூடுதலான ஒளியும் இந்த டயோடுகள் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ந் தேதி நடக்கும் விழாவில் சுவீடன் அரசர் வழங்குகிறார்.
இதற்கிடையே இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு 9-ந் தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும் என நோபல் பரிசு அகாடமி தெரிவித்துள்ளது