இஸ்ரேல் ஈரான் மோதலில் உள்ளே வரும் ஈராக்? இப்படியே வரிசையாக அரபு நாடுகள் உள்ளே வந்தால் உலக போர் தான்!
தெஹ்ரான்: இஸ்ரேல் நாட்டிற்கும் ஈரான் நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஈராக்கும் உள்ளே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்.. நிச்சயம் அதுவே பிராந்திய போரின் தொடக்கமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இஸ்ரேலைச் சுற்றிலும் மோதல் போக்கு தான் இருக்கிறது.

இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஏற்கனவே போர் தொடங்கிவிட்டது. இஸ்ரேல்- ஈரான் இடையே கூட நேரடியாகப் போர் வெடிக்கும் ஒரு மோசமான சூழலே நிலவி வருகிறது.
இஸ்ரேல்- ஈரான் மோதல்: முதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி தரும் வகையில் கடந்த மாதம் இறுதியில் ஈரான் மீது இஸ்ரேல் பதிலுக்குத் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் போட்டுள்ள திட்டங்கள் குறித்து சில ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈராக்கில் இருந்து நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் குழு ஈராக்கில் செயல்பட்டு வரும் நிலையில், அதன் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கூட ஈராக்கிற்குச் சத்தமில்லாமல் அனுப்பும் நடவடிக்கையிலும் ஈரான் இறங்கியுள்ளதாம்.
ஈராக்: ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பு சாதாரண அமைப்பு இல்லை.. கடந்த ஓராண்டில் மட்டும் அவர்கள் இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்கள் மூலமாகவே இந்தத் தாக்குதலையும் நடத்த ஈரான் திட்டமிட்டுவருகிறது.
ஈராக் பல்வேறு தேவைகளுக்காக ஈரானையே நம்பி இருக்கிறது. இதன் காரணமாகவே தனது நாட்டில் இங்கும் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள் மீது பெரியளவில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. ஒருவேளை ஈராக்கில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு, அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ஈராக் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளும்.
ஈராக் பிரதமர்: இஸ்ரேல் மீது தங்கள் நாட்டில் இருந்து எந்தவொரு தாக்குதலையும் நடத்த வேண்டாம் என்று ஈராக் பிரதமர் முகமது அல்-சூடானி தொடர்ந்து ஈரான் தரப்பிற்கு வலியுறுத்தி வருகிறார். ஆனால், அங்குள்ள ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதே இல்லை. கடந்த ஓராண்டாக இஸ்ரேல் மீது சிறு சிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இஸ்ரேலும் சும்மா இல்லை: இந்தச் சூழலில் தான் இஸ்ரேல் மீது ஈராக்கில் இருந்து பெரியளவில் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை இப்படித் தாக்குதல் நடந்தால், அதற்குப் பதிலடி தரவும் இஸ்ரேல் ரெடியாகவே இருக்கிறது. ஈராக் நாட்டில் உள்ள முக்கியமான 30 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி வரிசையாக அரபு நாடுகள் உள்ளே வந்தால் அது பிராந்திய போராக வெடிக்க வாய்ப்பு அதிகம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications