காசா மீது சரமாரி வான்வெளி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாப பலி
ஜெருசேலம்: காசா மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜிஹாத் ஆயுதக் குழுவின் மூத்த தளபதியும் குழந்தைகள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா பகுதியின் தெற்கில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தளபதியான மன்சூர் உயிரிழந்ததாக அந்நாட்டு அறிக்கை உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் மேலெழுந்துள்ளன. மேலும் இதற்கு பதில் தாக்குதல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்குமான பிரச்னை ஓட்டோமான் பேரரசு காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இந்த பேரரசு வீழ்ந்த பின்னர் இந்த பகுதியில் யூதர்களும், இஸ்லாமியர்களும் பெருமளவு குடிபெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படுகொலைகளிலிருந்து தப்பிக்க பெரும்பாலான யூதர்கள் இந்த பகுதியில் குடி பெயர்ந்தனர். இதனையடுத்து இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் மோதல்கள் உருவாகின. பின்னர் இந்த பகுதியை யூத அரபு பகுதி, பாலஸ்தீனம் என இரண்டாக பிரிக்கப்பட்டன. அப்போதிலிருந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக் குழுவின் மூத்த தளபதி மன்சூர் மற்றும் 4 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு சர்வதேச தரப்பிலிருந்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென இஸ்ரேல் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பு ஏவிய ராக்கெட் தோல்வியுற்றதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தொடர் தாக்குதல் சம்பவங்களை காசா எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் தற்போது வரை 6 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர். ஆனால் இவற்றில் பெரும்பாலும் இடை மறிக்கப்பட்டுவிட்டாதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 15 மாதங்களுக்கு முன்ன இதுபோன்ற தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் சுமார் 260க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இதிலிருந்து மீள்வதற்குள் முன்னர் மற்றுமொரு போர் அச்சுறுத்தலை இஸ்ரேல் ஏற்படுத்தி வருவதாக காசா குற்றம்சாட்டியுள்ளது. மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள இந்த காசா பகுதியில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தொடங்குவதற்கு முன்னர் காசாவிற்கான எரிபொருள் விநியோகம் மற்றும் மின் விநியோகத்தை நிறுத்தியது. தற்போது இங்கு ஒரு நாளைக்கு சுமார் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இதனால் மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுடனும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி பேச்சு வாரத்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எப்படியாயினும் இரு நாட்டு அரசு மோதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனை.. ஆஸாதி சாட்டிலைட்டை 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கியது எப்படி?