முடிந்தது 11 நாள் மோதல்.. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.. காஸாவில் அமைதி!
ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 11 நாட்களாக நடந்து வந்த போர் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. காஸாவில் மிக கடுமையான மோதல் நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
Recommended Video
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே காஸாவில் மிக கடுமையான மோதல் கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது. ஹமாஸ் படையும், இஸ்ரேல் படையும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டது.
பாலஸ்தீனத்தில் அல் அக்சா மசுத்திக்குள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காஸாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது.
2 பெரும் போர்கள்.. ஒரு ஒப்பந்தம்.. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எப்படி? கலங்க வைக்கும் வரைபடம்
பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸாவில் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது. இதுதான் போராக உருவெடுத்தது. கடந்த 11 நாட்கள் போரில் இஸ்ரேல் காஸாவில் தொடர்ந்து வான்வெளி தாக்குதல்களை மாறி மாறி நடத்தியது. இதில் 203க்கும் அதிகமான நபர்கள் பலியானார்கள். 70 க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள்.
இடமாற்றம்
60 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்து, அகதிகள் முகாம்களில் தங்கும் நிலை ஏற்பட்டது. முக்கியமாக காஸாவில் உள்ள பெரிய கட்டிடங்கள், கொரோனா சோதனை மையம், வணிக வளாகங்கள் என்று எல்லாம் வான்வழி தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்டது. காஸாவில் ஹமாஸ் படை இருக்கும் பகுதிகளை இஸ்ரேல் குறி வைத்து தாக்கி வந்தது. இதற்கு காஸாவில் இருந்து ஹமாஸ் படையும் பதில் ராக்கெட் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல்
இதில் இஸ்ரேல் தரப்பில் 12 பேர் பலியானார்கள். இஸ்ரேலின் ஏவுகணையை இடைமறித்து ஆயுதமான அயர்ன் டோம் காரணமாக, இஸ்ரேல் தரப்பில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடக்கும் நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகள் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது.
போர் நிறுத்தம்
ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டு அறிக்கையை அமெரிக்கா தடுத்தது. அதேசமயம் உடனடியாக காஸாவில் போர் நிறுத்தத்தை 24 மணி நேரத்தில் நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்க அதிபர் பிடன் கோரிக்கை விடுத்து இருந்தார். பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இதே கோரிக்கைகள் வைத்து வந்தன.
எகிப்து
அதோடு நேற்று எகிப்து சார்பாக போர் நிறுத்த கோரிக்கை வைக்கப்பட்டு, இதற்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டன. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் ஹமாஸ் உடனே தாக்குதலை நிறுத்தும் என்று எகிப்து தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய மீட்டிங்கிற்கு பின் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
முடிவு
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 11 நாட்களாக நடந்து வந்த போர் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இன்று அதிகாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது காஸாவில் மொத்தமாக தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காஸாவில் கடந்த 3 மணி நேரமாக அமைதி நிலவி வருகிறது. போர் நிறுத்தம் செய்யப்பட்டாலும் காஸா, இஸ்ரேல் படை இரண்டும் கவனமாக எல்லைகளை கண்காணித்து வருகிறது.
காஸா
காஸாவில் இனி ஐநா மீட்பு பணிகளை மேற்கொள்ளும். அங்கு ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் தொடங்கும். அகதிகள் முகாம்களில் இருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இடங்களுக்கு திரும்பி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.