சவுதி அரேபியா-இஸ்ரேல் பிரதிநிதிகள் ரகசிய சந்திப்பு.. ஈரானுக்கு எதிராக ஸ்கெட்ச்!
ஜெருசலேம்: உலக நாடுகளுடன் ஈரான் நெருங்குவதை தடுக்க இஸ்ரேலும்-சவுதி அரேபியாவும் ரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும், சவுதிக்கும் நடுவே பெரிய அளவில் ராஜாங்க உறவு இருந்ததில்லை என்றபோதிலும், ஈரான் நாட்டின் எழுச்சியை கட்டுப்படுத்த இவ்விரு நாடுகளும் கைகோர்த்துள்ளனவாம்.
இவ்விரு நாடுகளின் ரகசிய சந்திப்பு குறித்து இஸ்ரேலின் முன்னணி பத்திரிகையானா ஜெருசலேம் போஸ்ட் செய்து வெளியிட்டுள்ளது.
2014 முதலே, இந்தியா, இத்தாலி மற்றும் செக் குடியரசு நாடுகளில் இவ்விரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து, ரகசிய ஆலோசனைகள் நடத்தியுள்ளதாக அந்த நாளிதழ் செய்து வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், இஸ்ரேலின் அடுத்த வெளியுறவுத்துறை டைரக்டர் ஜெனரலான டோர் கோல்ட் மற்றும் சவுதியின் ஓய்வு பெற்ற ஜெனரல் அன்வர் மஜீதும் வாஷிங்டன்னில் சந்தித்து பேசியுள்ளனர். வேறு எந்த அதிகாரிகளின் துணையின்றியும், இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஈரான் நாட்டுக்கு மேலை நாடுகள் விதித்த பொருளாதார தடையை நீக்க சம்மதித்துள்ளன. அதற்கு பதிலாக, அணு ஆயுதம் தொடர்பான உடன்பாட்டுக்கு பூர்வாங்க அடிப்படையில் ஈரான் சம்மதித்துள்ளது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வல்லரசு நாடுகள் ஈரானிடம் நட்புடன் நெருங்கி வருகின்றன.
இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்து, ஈரானை வளரவிடாமல் செய்வது குறித்து சவுதி அரேபியாவும், இஸ்ரேலும் திட்டம் தீட்டியிருக்க கூடும் என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.