யுத்த நிறுத்த முயற்சிகள்.. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி மீது இஸ்ரேல் காட்டம்!
டெல் அவிவ்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து இஸ்ரேல் கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகிறது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்த கொடூர தாக்குதலில் 1,032 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள்.
இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவ்வப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூறி வருகிறது. ஆனாலும் யுத்தம் நிறுத்தப்படவில்லை.
எகிப்து முயற்சி
இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் எகிப்து அமைதி முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கி மூன் எகிப்து சென்றார்.
ஜான் கெர்ரி
அதேபோல் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் இஸ்ரேல்- பாலஸ்தீன அமைதி முயற்சிகளை மேற்கொள்ள கெய்ரோ சென்றார்.
இஸ்ரேலை சீண்டிய கெர்ரி
ஜான் கெர்ரி கெய்ரோ செல்லும் முன்பாகவே, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது மைக் ஆன் செய்யப்பட்டிருப்பது தெரியாமல், இந்த யுத்தத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துகளால் இஸ்ரேல் அவர் மீது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதாவது, மூன்று பேரை கடத்தி கொன்றதற்காக இவ்வளவு பெரிய யுத்தத்தை நடத்துவதா? அப்பாவி பொதுமக்கள், குழந்தைகளை கொல்வதா? என்று கெர்ரி சீறியிருந்தார். இதுதான் இஸ்ரேலின் அதிருப்திக்கு காரணம்.
களத்தில் கத்தார், துருக்கி
இந்த நிலையில் கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் ஹமாஸ் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி யுத்த நிறுத்ததை மேற்கொள்ள வலியுறுத்துவதாக அறிவித்தன.
கெர்ரியின் அமைதி திட்டம்
பின்னர் எகிப்து சென்ற கெர்ரி அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒரு வரைவு திட்டத்தை முன்வைத்தார். அதில், ஹமாஸ் இயக்கம் ராக்கெட்டுகளை ஏவும் போது தன்னை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேலுக்குள் நுழைய மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்கலாம்.
ஹமாஸுக்கு நிதி உதவி
ஆனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாவது கவலைக்குரியது. அதே நேரத்தில் காஸா மேம்பாட்டுக்கு கோருகிற 60 மில்லியன் டாலரில் 47 மில்லியன் டாலரை கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இஸ்ரேல் நிராகரிப்பு
ஆனால் இஸ்ரேல் இதை நிராகரித்துவிட்டது. கெர்ரியின் நிலைப்பாடு ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்று இஸ்ரேல் அரசு மற்றும் ஊடகங்கள் கடுமையாக சாடி வருகின்றன.
இதனால் அமெரிக்காவின் அமைதி முயற்சிகள் திரிசங்கு நிலையில் இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.