பூமிக்கு மிக அருகில் நிலாவில் ரியல் எஸ்டேட்... காலனி கட்ட காத்திருக்கும் அறிவியலாளர்கள்!
நிலாவில் இருக்கும் பெரிய பெரிய பள்ளங்களில் இனி சிறிய அளவில் நிறைய வீடுகளைக் கட்டி கால்னி அமைக்கலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ: நிலாவில் இருக்கும் பெரிய பெரிய பள்ளங்களில் இனி சிறிய அளவில் நிறைய வீடுகளைக் கட்டி காலனிகள் அமைக்கலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரிவாக ஆராய்ச்சி நடத்த ஜப்பான் விண்வெளி ஆய்வுத் துறை முடிவு செய்துள்ளது.
ஜப்பான் விண்வெளித்துறையின் ஆராய்ச்சி செயற்கை கோளான "செலின்" நிலாவை பல மாதங்களாக தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றது. நிலாவின் மேற்பரப்பு குறித்தும், அதன் திடத்தன்மை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நிலாவில் இருக்கும் குழிகளில் வீடுகள் கட்டலாம் என அந்த விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இது நிலாவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
நிலாவில் தண்ணீர் இருக்கிறது
உலகில் இருக்கும் முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி நாடுகள் அனைத்தும் கடந்த சில வருடங்களாக நிலாவில் எந்த விதமான ஆராய்ச்சியும் நடத்தாமல் இருந்து வந்தது. நிலாவில் ஆராய்ச்சி நடத்துவது தேவையற்ற பொருட் செலவு என கருதி வந்தது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நிலாவில் சிறிய அளவில் நீர் இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோ கண்டுபிடித்தது. இதை அமெரிக்காவின் நாசாவும் ஒப்புக் கொண்டது. இதையடுத்து நிலாவில் மீண்டும் ஆராய்ச்சிகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
மீண்டும் நிலாவுக்கு மனிதனை அனுப்பலாம்
இதையடுத்து உலகின் அனைத்து நாடுகளும் நிலாவில் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அமெரிக்காவின் நாசாவும் மீண்டும் நிலாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியது. நிலாவிற்கு பல வருடங்களுக்கு முன்பு மனிதர்களை அனுப்பியது போலவே மீண்டும் மனிதர்களை அனுப்பும் முடிவை எடுத்தது. இதற்காக வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது நாசா. இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்த திட்டம் நிறைவு பெறும் என நாசா தெரிவித்துள்ளது.
நிலாவில் ஜப்பான் ஆராய்ச்சி
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி துறையும் நிலாவை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. நிலாவில் மனிதர்களை தங்க வைக்க முடியுமா என்பதை கண்டுபிடிப்பதற்காக "செலின்"என்ற விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியது அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி துறை. நிலாவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறித்து இது ஆராய்ச்சி செய்தது. இந்த நிலையில் நிலாவில் முதலில் யார் குடியேறுவது என்ற போட்டி ஜப்பான், அமெரிக்கா, சீனா நாடுகள் இடையே உருவானது.
நிலாவில் காலணி கட்டலாம்
தற்போது இந்தப் போட்டியில் ஜப்பான் வெற்றிபெற்றுள்ளது. ஜப்பான் அனுப்பிய ''செலின்'' விண்கலம் நிலவில் மனிதர்கள் வாழ ஏற்ற இடங்களை கண்டுபிடித்துள்ளது. எந்த இடங்களில் மனிதர்கள் வாழலாம் என்பதை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதிகளில் பெரிய அளவில் காலனிகள் அமைக்கலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 2030 இறுதிக்குள் எப்படியாவது நிலவில் மனிதர்களை அனுப்பி காலனி அமைக்கும் பணியை முடிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.