ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் அபே.. அக்டோபர் 22ஆம் தேதி தேர்தல்!
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையை பிரதமர் ஷின்சோ அபே கலைத்துள்ளார்.
டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையை பிரதமர் ஷின்சோ அபே கலைத்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களால் ஜப்பானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் அபே அறிவித்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் லோயர் ஹவுஸ் இன்று கலைக்கப்பட்டுள்ளது.
அக்.22ல் தேர்தல்
இதைத்தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் மக்களிடையே அபேவுக்கு உள்ள நற்பெயரை பயன்படுத்திக் கொண்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி அச்சுறுத்தி வரும் நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டுக்கு முன்னதாக தேர்தல் நடத்துவது தேவையில்லாத ஒன்று என எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நற்பெயரை பயன்படுத்தி..
இதனிடையே வடகொரியாவுக்கு தனது அரசு தக்க பதிலடி கொடுக்க இந்த தேர்தல் தடையாக இருக்காது என பிரதமர் அபே கூறியுள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் அபே வலுவான தலைவர் என போற்றப்படும் நிலையில் அதனை பயன்படுத்தி அவர் தேர்தலை நடத்துவதாக கூறப்படுகிறது.
கவர்னரின் எதிர்ப்பு
இதனிடையே பிரதமர் அபேவுக்கு எதிராக கட்சித் தொடங்கவுள்ளதாக டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் கட்சி வேட்பாளர்கள் லோயர் ஹவுஸின் 475 இடங்களிலும் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.