சிறுமி பலாத்கார வழக்கு விசாரணையின் போது தூங்கிய நீதிபதி டிஸ்மிஸ்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இந்தியப் பொருளாதாரம் குறித்த விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் தூங்கியதாக சர்ச்சை உண்டானது. அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்னதாகவே கர்நாடக சட்டசபையில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாவதத்தின் போது அம்மாநில முதல்வர் உறங்கியதாக ஊடகங்களில் வீடியோ வெளியானது.
நம்மூரில் மக்கள் பிரதிநிதியாக செயல்பட வேண்டிய அரசியல் தலைவர்கள் தான் இவ்வாறு கடமையிலிருந்து தவறி பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்றால், இங்கிலாந்தில் நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதி ஒருவர் வழக்கு விசாரணையின் போது உறங்கியது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் சிறுமி பலாத்கார வழக்கு விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்த போது, தனது இருக்கையில் அமர்ந்தபடியே நீதிபதி நன்றாக அயர்ந்து தூங்கி விட்டார்.
இதனால் வழக்கு விசாரணையை சரிவர பதிவு செய்ய முடியவில்லை என அவர் மீது புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், நீதிமன்றத்தில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.