98.14% ஓட்டு பதிவாகியும் பலன் இல்லை.. வெடித்த மக்கள் புரட்சி.. கிர்கிஸ்தான் பொதுத் தேர்தல் ரத்து
மாஸ்கோ: கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தால் நாடாளுமன்றம் சூறையாடப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று கிர்கிஸ்தான். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 16 கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கொரோனா தொற்றுக்கு இடையேயும், 98.14 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
7 சதவீத வாக்குகள்
கிர்கிஸ்தானில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. ஆனால், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் போட்டியிட்ட 16 கட்சிகளில் வெறும் 4 கட்சிகள் மட்டுமே 7 சதவீத வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றன.
போராட்டங்கள்
இதனால் மற்ற 12 கட்சிகளும் கடும் கோபமடைந்தன. தேர்தல் முடிவுகளை ஏற்க போவதில்லை என அந்த கட்சிகள் கூட்டாக முடிவெடுத்தன. தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் பொதுமக்களும் கைகோர்த்ததால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.
பெரும் மோதல்
நேற்று தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர்.
இந்த மோதல் சம்பவத்தில், சுமார் 600 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாடாளுமன்றம் சூறை
அதுமட்டுமல்ல பிஷ்கெக்கில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை உடைத்து, போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து ஆவணங்களை கிழித்தெறிந்தனர்.
இந்த போராட்டத்தால் அந்த நாட்டில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், கிர்கிஸ்தானில் நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அமைதி திரும்பியுள்ளது.