சும்மா... கதறிக் கதறி அழுங்கம்மா... ஜப்பானில் பெண்களுக்கான பிரத்யேக "அழுவாச்சி" ரூம்கள்!
டோக்கியோ: ஜப்பானில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள், தங்கள் சோகம் தீரும் அளவிற்கு கதறி அழுவதற்காகவே ஹோட்டல் ஒன்றில் பிரத்யேகமாக அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
ஜப்பானின் ஷின்ஜூகு நகரில் உள்ளது மிட்சுய கார்டன் யோட்சுயா ஹோட்டல். இங்கு பெண்களுக்காகவே பிரத்யேகமாக சில அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு ‘அழுகை' அறைகள் என்று பெயர்.
இந்த அறையில் தங்குவதற்கு நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
கவலை தீர அழுங்கள்...
அப்படி என்ன சிறப்பு அந்த அறையில் என்றால், இங்கு அழுது அழுது டயர்ட் ஆகாமல் இருக்க சில வசதிகள் செய்யப் பட்டு இருப்பது தான். முதலில் இங்கு வரும் பெண்கள் எந்த விதமான கட்டுப்பாடும் இன்றி மனபாரம் நீங்கும் வரை, கதறிக் கதறி அழுகலாம்.
கண்ணீர் டிஸ்யூ...
ஒவ்வொரு அறையிலும் கண்ணீரைத் துடைப்பதற்கென்றே சிறப்பு டிஸ்யூ பேப்பர்கள் வைக்கப் பட்டிருக்கும். அதே போல், அழுதழுது கண்கள் வீங்காமல் இருக்க கண்களை நீராவியில் காட்டும் வசதியும் இங்கு உள்ளது.
மனதார சிரியுங்கள்...
மனதார அழுது தீர்த்த பின், சந்தோஷமான மனநிலைக்கு வருவதற்காக இந்த அறையில் நகைச்சுவைப் படங்களின் தொகுப்பு மற்றும் காமிக் புத்தகங்கள் போன்றவை அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.
புத்தம் புதுக்காலை...
அவற்றைப் பார்த்து, படித்து விட்டு சந்தோஷமாகத் தூங்கலாம். பின் மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் தங்களது இயல்பு வேலைக்குப் பெண்கள் திரும்பலாம்.
இதுதானா அது!
ஜப்பான் பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம். அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே இந்த சிறப்பு வசதியை ஹோட்டல் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளதாம்.
ஓ... இதுக்கு பேரு தான் ரூம் போட்டு மூக்கைச் சிந்துவதோ ..ஸாரி... அழறதோ.. !