வடகிழக்கு ஜப்பானை சூறையாடிய லயன்ராக் புயல்: கனமழை- 110 விமானங்கள் ரத்து
டோக்கியோ: லயன்ராக் புயல் காரணமாக வடகிழக்கு ஜப்பானில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. கடலில் அலைகளில் வேகம் அதிகரித்துள்ளது. புயலின் தாக்கத்தால் அந்த பகுதிகளில் புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 110க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையாக உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சூறாவளி ஏற்பட்ட அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் பெரிய சூறாவளி நெருங்கியது.

பசிபிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த 'லயன்ராக்' புயல், ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று பிற்பகல் கரையை கடந்தது.
இந்த புயலின் எதிரொலியாக காற்றுடன் கூடிய பலத்த மழையும் கொட்டியது. இதனால், 110 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்குள்ள புகுஷிமா அணு மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தியும் பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டோயோட்டா, இந்த புயல் கடந்துவரும் வழியில் உள்ள தனது இரண்டு உற்பத்தி அலகுகளில் இன்றைய உற்பத்தியை நிறுத்திவைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
கனமழையால் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள கிழக்கு ஜப்பான் பகுதியில், ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. முன் பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையினர் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பூகம்பம் மற்றும் சுனாமியினால், இப்பகுதி பலத்த சேதத்தை சந்தித்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு சேதமடைந்த புகுஷிமா அணு உலையை நடத்தி வரும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் தனது வெளிப்புற செயல்பாடுகள் பலவற்றை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக கடற்கரை ஓரம் வசிக்கும் மக்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications