மோடியைப் பார்க்க யுஎஸ்ஸில் செம கூட்டம்.. சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுக்க முடிவு!
நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்கப் பயணத்தின்போது நியூயார்க் மாடிசன் ஸ்கொயர் பூங்கா அரங்கில் நடைபெறும் பொதுமக்கள் வரவேற்பில் பங்கேற்கவுள்ளார். அதில் பங்கேற்க பெருமளவில் இந்தியர்கள் ஆர்வம் தெரிவித்து வருவதால் பங்கேற்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவுள்ளனராம்.
செப்டம்பர் 28ம் தேதி இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றுக்காக இந்திய அமெரிக்கர்களின் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களைத் தேர்வு செய்து வருகிறது. இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். தொலைதூரமான அலாஸ்கா, ஹவாய் ஆகிய இடங்களிலிருந்தும் கூட பலர் விண்ணப்பித்துள்ளனராம்.
அமெரிக்காவின் பல பகுதிகளிலும் உள்ள 407 இந்திய அமெரிக்க சமூக அமைப்புகள், மத அமைப்புகள் மோடி நிகழ்ச்சிக்கு வருவோரின் பெயர்களை அனுப்பலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தன. ஆனால் பெருமளவில் தற்போது மக்கள் ஆர்வம் தெரிவித்திருப்பதால் பங்கேற்பாளர்களை சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்வு செய்ய தீர்மானித்துள்ளனர்.
ஆன்லைனில் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் உள்ளதால் மேலும் பல ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என்று தெரிகிறது. ஆனால், சந்திப்பு நடைபெறும் மாடிசன் ஸ்கொயர் பூங்காவில் 20,000க்கு மேற்பட்டவர்களை அமரச் செய்ய முடியாது என்பதால்தான் குலுக்கல் முறை தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ரேண்டம் எண் குலுக்கலை அறிமுகப்படுத்தவுள்ளனர். பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் எண்கள் கொடுத்து அவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவுள்ளனராம்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆவலாக உள்ள வாஷிங்டனைச் சேர்ந்த அஞ்சு ப்ரீத் கூறுகையில், 1893ம் ஆண்டு சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றியபோது நான் பிறந்திருக்கவில்லை. இப்போது நியூயார்க்கில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை நரேந்திர மோடி நிகழ்த்தவுள்ளார். இதை நான் நிச்சயம் மிஸ் செய்ய விரும்பவில்லை என்றார்.