விமானி அறையில் பைலட்களுடன் இனி 3வது நபரும்: மலேசிய ஏர்லைன்ஸ் உத்தரவு
கோலால்பூர்: எம்.ஹெச். 370 விமானம் மாயமான பிறகு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.ஹெச். 370 கடந்த 8ம் தேதி சீனா கிளம்பிச் சென்றபோது 239 பேருடன் மாயமானது. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டது என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
விமானம் கடலுக்குள் விழ விமானத்தின் கேப்டன் காரணமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின.
கேப்டன் ஷா
மனைவியை விட்டுப் பிரிந்த கேப்டன் ஜஹரி அகமது ஷா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். அந்த உறவிலும் சிக்கல் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்த ஷா தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டதாக செய்திகள் வெளியாகின.
மலேசியா ஏர்லைன்ஸ்
எம்.ஹெச். 370 விவகாரத்திற்கு பிறகு மலேசியா ஏர்லைன்ஸ் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விமானி அல்லது துணை விமானி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயற்கை உபாதையை கழிக்க விமானி அறையில் இருந்து வெளியேறினால் சிப்பந்திகளில் ஒருவர் அந்த அறையில் இருக்க வேண்டும். அதாவது விமானி அறையில் விமானியோ, துணை விமானியோ இனி தனியாக இருக்கக் கூடாது.
புதிய விதிமுறை
மலேசியா ஏர்லைன்ஸ் விமானி அறையில் எப்பொழுதும் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எம்.ஹெச். 370 விமானம் மாயமான ஒரு வாரத்திலேயே அமல்படுத்தியுள்ளது. ஆனால் அது இன்று தான் உலகிற்கு தெரிய வந்துள்ளது.
விமானி அறை
விமானி அறைக்கதவு எப்பொழுது எல்லாம் திறக்கிறதோ அப்பொழுது எல்லாம் அதன் வாயிலில் விமான சிப்பந்திகளில் ஒருவர் நிற்க வேண்டும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.