மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது: 24 நாட்டு கரன்சி பறிமுதல்
கோலாலம்பூர்: மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் செலங்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு முதல் வசித்து வந்த ஐ.நா. ஆணைய அகதிகள் அட்டை வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் மலேசிய நாட்டின் தீவிரவாத தடுப்பு படை போலீசாரால் கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஐ.ஜி. காலித் அபுபக்கர் தெரிவித்தார்.
அவர்கள் மலேசியாவில் இருந்து கொண்டு இயக்கத்தின் கொள்கைகளை பரப்புவது, நிதி திரட்டுவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மலேசிய போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களை கைது செய்தபோது இயக்கதின் கொள்கைகள் அடங்கிய பிரசுரங்கள், மீடியா கருவிகள், 24 நாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை தாக்க திட்டமிட்ட தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.