மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் சந்திப்பு!
கோலாலம்பூர்: நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ள ரஜினிகாந்த், அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக்கை இன்று மாலை சந்தித்தார்.
நடிகர் சங்கத்தின் கட்டட நிதி திரட்ட மலேசிய தலைநகரக் கோலாலம்பூரில் இரண்டு நாட்கள் நட்சத்திரக் கலை விழா நாளையும் நாளை மறுநாளும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 350-க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கோலாலம்பூர் சென்றுள்ளனர். ரஜினிகாந்தும் கமல் ஹாஸனும் நேற்று இரவு மலேசியா சென்றனர்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சில மாதங்களுக்கு முன் நஜீப் ரசாக் இந்தியா வந்திருந்தபோது, சென்னைக்கு வந்து ரஜினிகாந்தைச் சந்தித்தார். அவருக்கு தன் இல்லத்தில் விருந்தளித்தார் ரஜினிகாந்த். ரஜினியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு மகிழ்ந்தார் ரசாக்.
இப்போது ரஜினிகாந்த் கோலாலம்பூர் வந்திருப்பதை அறிந்து, அவரை தனது மாளிகைக்கு அழைத்தார் நஜீப் ரசாக். இன்று மாலை அவரது மாளிகைக்குச் சென்ற ரஜினி, ரசாக்குடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். பின்னர் ரஜினிக்கு விருந்தளித்தார் நஜீப் ரசாக்.
இந்திய நடிகர் ஒருவருக்கு மலேசிய பிரதமர் தனது இல்லத்தில் விருந்தளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.