மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு 60 வருடமாக பங்களித்து வரும் பாவை-க்கு சாதனை புத்தக விருது!
கோலாலம்பூர்: மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேல் பங்களிப்பு செய்து வரும் திருமதி.பாவை அவர்களுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலேசியச் சாதனைப் புத்தக விருது வழங்கப்பட்டது. இந்த விருதளிப்பு விழாவை எழுத்தாளர் சங்கம் மிக விமர்சையாக ஏற்பாடு செய்து இருந்தது.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பார்வையற்றோர் சங்க அரங்கில் நடைபெற்ற இந்த விருதளிப்பு விழாவில் டேவான் பகாசா டான் புஸ்தாகா தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி ஜாஜாரி பிரதிநிதியாக பன்மொழி பிரிவுத் தலைவர் டாக்டர் அசிசூல் இஸ்மாயில் கலந்து சிறப்பித்தார்.

அவருடன் உயிரியல் துறையில் உலகளவில் மிகச் சிறந்த நூறு ஆளுமைகளில் ஒருவரான டாக்டர் மஹாலெட்சுமி, உப்சி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தம்பு நடராஜன், சங்கத்தின் மேனாள் தலைவர்களான திரு. பெ.இராஜேந்திரன், திரு. மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மலேசியச் சாதனைப் புத்தக வாரியத்தின் பிரதிநிதி குமாரி மேனகா மலேசியச் சாதனைப் புத்தக விருதை வழங்கியதும் கவிஞரும், "ஒன்இந்தியாதமிழ்" ஜோதிட பக்கத்திற்கு பங்களித்து வரும் பிரபல ஜோதிடருமான, திரு.பெர்னாட்ஷா வாழ்த்துக் கவிதை வாசித்தார்.
அவர்களோடு கூட்டரசு பிரதேசக் கல்வி இலாக்காவின் உதவி இயக்குனர்களான முனைவர் தர்மராஜ் சக்கரியா, உதவி இயக்குனர் திருமதி புஸ்பாதேவி, சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாக்காவின் உதவி இயக்குனர் திரு. செங்குட்டவன்,முனைவர் மனோன்மணி, முனைவர் டத்தின் சரஸ், முனைவர் குமரவேல், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலையாசிரியர் மன்றத் தலைவர் திரு. எஸ்.எஸ். பாண்டியன், கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் சட்சிதானந்தன், பேராக் மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் ந.கு. முல்லைச்செல்வன் உட்பட கல்வியாளர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள், உயர்க்கல்வி மாணவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு பாவை அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications