ரகளை செய்த நோயாளியின் தந்தை சரண்... டெக்சாஸ் மருத்துவமனை பரபரப்பு முடிந்தது!
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண மருத்துவமனை ஒன்றில் நோயாளியின் தந்தை ஒருவர் செய்த ரகளையால் அங்கு பதட்டம் ஏற்பட்டு விட்டது. கிட்டத்தட்ட நான்கு மணி நேர கலாட்டாவுக்குப் பின்னர் பீதியை ஏற்படுத்திய நபர் போலீஸில் சரணடைந்தார்.
கடந்த மாதம் சிட்னியில் உள்ள உணவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்தவர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து, பின்னர் விடுவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாரீசில் தொடர் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களும், வணி வளாகத்தில் 4 பேர் பயங்கரவாதிகளால் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் புதிய பரபரப்பு ஏற்பட்டு விட்டது. டெக்சாஸ் மாகாணத்தில் டோம்பால் பகுதியில் மருத்துவ சிகிச்சை மையமும், அதன் அருகே புற்றுநோய் சிகிச்சை மையமும் அமைந்துள்ளது. அதில் மருத்துவ சிகிச்சை மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த 2 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தவல் வெளியானது.
சிறைப் பிடித்துள்ள மர்மநபர், மனநலம் பாதிக்கப் பட்டவர் என்றும், அவசர சிகிச்சைப் பிரிவு முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மருத்துவமனையை 1 கிமீ தூரத்திற்கு சுற்றி வளைத்தனர்.
மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உண்டானது.
தொடர் விசாரணைக்குப் பிறகு, மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் சிறை பிடிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட நபரின் மகன் அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரது தந்தை பெரும் அதிர்ச்சி அடைந்தார். மன வேதன மற்றும் குழப்பத்தில் அவர் தனது மகன் தங்கியிருக்கும் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார். மிரட்டல் விடுக்கும் அவர் பேசினார். இதனால் பதட்டம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த கலாட்டா தொடங்கியது. இதையடுத்து போலீஸார் அதிரடிப்படையினர் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் பிரச்சினை செய்த நபருடன் வெளியில் இருந்தபடி பேசினர். நீண்ட நேரம் தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், அந்த நபர் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்தார். போலீஸில் சரணடைந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை என்று போலீஸார் பின்னர் தெரிவித்தனர்.
இதன் மூலம் இந்தப் பதட்டம் முடிவுக்கு வந்தது.