மட்டன் இல்லாமல் வெறும் சைவ உணவு கொடுத்த மனைவியை அடித்துக் கொன்ற 75 வயது தாத்தா
நியூயார்க்: அமெரிக்காவில் இரவு நேரம் சைவ உணவை பரிமாறியதற்காக 75 வயது தாத்தா தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்லினைச் சேர்ந்தவர் நூர் ஹுசைன்(75). பாகிஸ்தானியர். அவரது மனைவி நசர் ஹுசைன்(66) இரவு நேர உணவுக்கு வெறும் சைவ உணவு வகைகளை பரிமாறியுள்ளார். தனக்கு பிடித்த மட்டன் பரிமாறாமல் காய்கறிகளை கொடுத்ததால் ஆத்திரமடைந்த நூர் தனது மனைவியை அடித்துக் கொன்றார்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த இந்த கொலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தான் தனது மனைவியை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கவில்லை என்று நூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் நசர் இறந்துபோக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அடித்தார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் சபீஹா மத்னி கூறுகையில்,
நூர் தனது மனைவியை திருத்த முயற்சிக்கவில்லை. அவர் நசர் படுத்திருக்கையில் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் நசரின் தலை, கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது நூர் தனது மனைவியை பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர் என்றார்.