கருப்பு பெட்டியை மாஸ்கோ கொண்டு செல்லும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள்!
கிவி: மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கைப்பற்றிய ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதை ஆய்வு செய்வதற்காக மாஸ்கோவுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.
298 பயணிகளுடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியா நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் 'ஏவுகணை' தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உடல் சிதறி உயிரிழந்தனர்.
உலகை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு யார் காரணம் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே விமானம் சிதறி விழுந்த இடத்தில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றியதாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது அந்த கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். மாஸ்கோவில்தான் கருப்பு பெட்டியை துல்லியமாக ஆய்வு செய்யும் வல்லுநர்கள் குழு இருப்பதால் இம்முடிவை மேற்கொண்டிருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அதில் உள்ள தகவல்களை, உண்மைகளை ரஷ்யா மறைக்கக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
விமான பாகங்கள் சிதறி விழுந்த இடங்களுக்கு அருகில் கூட தங்களது அதிகாரிகளை ரஷ்ய ஆதரவுப் படையினர் அனுமதிக்கவில்லை என்று உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.