விமானம் பற்றி மலேசியா பலவற்றை மறைக்கிறது: ஃபேஸ்புக்கில் தெரிவித்த மூத்த விமானி சஸ்பெண்ட்
கோலாலம்பூர்: தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானம் குறித்து மலேசியா எதையோ மறைக்கிறது என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்த மூத்த ஏர் ஏசியா விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்துவிட்டதாக மலேசியா கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த இன்மார்சாட் நிறுவனம் அளித்த தகவலின்படி இந்த முடிவுக்கு வந்துள்ளது மலேசியா.
ஆனால் விமானம் குறித்து எதையோ மலேசிய அரசு மறைக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
ஏர்ஏசியா விமானி
கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விமானி ஒருவர் மலேசிய அரசு கடலுக்குள் விழுந்த விமானம் பற்றிய தகவல்களை மறைப்பதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்
அந்த விமானி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் விமானத்தின் பாகங்கள் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. முதலில் ஆதாரங்களை காட்டிவிட்டு அதன் பிறகு எம்.ஹெச்.370 விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறுங்கள். அதுவரை உண்மைகளை மறைக்காதீர்கள். அரசுக்கு ஏகப்பட்ட விவரங்கள் தெரியும், ஆனால் அதை தெரிவிக்க மறுக்கிறது என்று பார்வையற்றவருக்கு கூட தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
சஸ்பெண்ட்
பெயர் தெரிவிக்கப்படாத அந்த மூத்த விமானி மலேசிய அரசு விமானம் குறித்த தகவல்களை மறைப்பதாக தெரிவித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேப்டன் ஜஹரி
விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தை அதன் கேப்டன் ஜஹரி அகமது ஷா வேண்டும் என்றே கடலுக்குள் விட்டாரா என்று மலேசிய ஏர்லைன்ஸ் தலைவர் அகமது ஜவ்ஹரி யஹ்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், எனக்கு தெரியவில்லை என்றார்.