நாயகன் ’மீண்டு’ வர்றார்.. ஈரானை மீண்டும் ஆட்டிப் படைக்கும் அயதுல்லா வாரிசு! அறிக்கையில் ஆடும் அரசு!
டெஹ்ரான்: ஈரானில் உச்ச அதிகாரம் கொண்ட 'சுப்ரீம் லீடர்' அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மோஜ்தபா கமேனி அதிகாரத்துக்கு வந்தார். இந்நிலையில், மோஜ்தபா கமேனி குறித்து சர்வதேச அளவில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதலால் முகம் சிதைந்த அவர் பொதுவெளியில் தோன்றாமல், எழுத்து மூலம் மட்டுமே உத்தரவுகளை வழங்கி வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருப்பது உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பின்னர், அந்நாட்டில் பல பெரிய பிரச்சினை வெடித்ததாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறிப்பாக, அந்த தாக்குதலில் கமேனி குடும்பத்தினரும், பல முக்கிய தலைவர்களும் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, அவரது மகனான மோஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்புக்கு வந்தார்.
ஆனால், பதவி ஏற்றதிலிருந்து மோஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாதது சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
மோஜ்தபா கமேனி
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் போது அவர் கடுமையாக காயமடைந்ததாகவும், தற்போது பாதுகாப்பு காரணங்களால் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சில ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, அவரது முகம் மற்றும் உதடுகள் கடுமையாக சேதமடைந்ததால் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாக்குதலில் அவரது ஒரு காலில் பல முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஒரு கையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அது மெதுவாக செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமேனி உடல்நிலை
இதன் காரணமாக அவர் நேரடியாக பொதுமக்கள் முன் தோன்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மோஜ்தபா கமேனி தற்போது அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக மட்டுமே உத்தரவுகளை அனுப்பி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நேரடி சந்திப்பு அல்லது பொதுக்கூட்ட உரைகள் இல்லாமல், கடிதங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ குறிப்புகள் மூலம் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன என கூறப்படுகிறது.
மோஜ்தபா கமேனி வதந்திகள்
இதனால், "அவர் உண்மையில் உயிருடன் உள்ளாரா?" என்ற கேள்வியும் சில சர்வதேச வட்டாரங்களில் எழுந்துள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களால் அவருடன் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள் மட்டுமே தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படாததால், பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன.
ஈரான் அரசியல்
சில தகவல்களில், ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கும் புரட்சிகர காவல்படைக்கும் இடையே அதிகாரப் பகிர்வு தற்காலிகமாக செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன. போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அங்கு நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் முழுமையாக குறையவில்லை என சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மோஜ்தபா கமேனி எங்கே இருக்கிறார்? அவரது உடல்நிலை என்ன? அவர் உண்மையில் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறாரா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை இந்த விவகாரம் உலக அரசியல் அரங்கில் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்கின்றனர்.














Click it and Unblock the Notifications