தாக்குதல் ஸ்டைலை மாற்றும் ஐஎஸ்ஐஎஸ்.. திணறும் பாதுகாப்பு படையினர்.. கவனிக்கும் இந்தியா!
பாரீஸ்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது தாக்குதல் முறையை புதிது புதிதாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை உயிர்களை கொல்ல வேண்டும் என்பது மட்டுமே. இதனால் பாதுகாப்பு ஏஜென்சிகளால், தாக்குதல் நடத்த செல்வோரை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
வெடிகுண்டுகளை வெடிக்க செய்வது, துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது லாரியை ஏற்றி கொல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், ஒரு ஆய்வு கூடம் போல செயல்படுகிறது. உயிர்களை எப்படி கொல்வது என்பது பற்றிய சிந்தனையிலேயே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் உள்ளனர். இதனால் புதுபுது வழிமுறைகளை கண்டறிந்து, அதை அரங்கேற்றி, மகிழ்கிறார்கள்.
உலகம் முழுக்க தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் பிரதமர் போன்ற விஐபிகளை சந்திக்க செல்வோரைத்தான் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதிப்பார்கள். இப்போது சென்னை ரயில் நிலையம் செல்ல வேண்டும் என்றாலும், கோயம்பேடு பஸ் நிலையம் செல்ல வேண்டும் என்றாலும் கூட மெட்டல் டிடெக்டர் சோதனையை கடக்க வேண்டியுள்ளது.
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை எடுத்து சென்றால் கண்டறியும் நவீன கருவிகள் வந்துவிட்டன. ஸ்கேனர் மெஷின்களும் உள்ளன. எனவேதான் தாக்குதல் வழிமுறையை மாற்றியுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
பாரீசின், நைஸ் நகரில் இன்று நடைபெற்ற தாக்குதலும் இப்படிப்பட்ட எதிர்பாராத தாக்குதல். தீவிரவாத கருத்துக்களால் மூளை சலவை செய்யப்பட்ட தனி மனிதர்களால் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை 'ஓநாய் தாக்குதல்' என்கிறார்கள் பாதுகாப்பு படையினர்.
தீவிரவாதிகள் எல்லை கடந்து நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுக்க பாதுகாப்பு படையினரால் முடியும். ஆனால், உள் நாட்டுக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல் மாதிரியிலான ஓநாய் தாக்குதல் நபர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதுதான் பாதுகாப்பு படையினருக்கு தலைவலி.
உள் நாட்டு போரால் பாதிக்கப்படும் வளைகுடா நாடுகளில் இருந்து பிரான்சுக்கு, அதிகப்படியான மக்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர். இதில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்களும் இருக்கலாம். மேலும், பிரான்சிலுள்ளவர்களை இணையதளம் மூலம் மூளைச்சலவை செய்தும் தனி மனிதர்களை கொண்டு தீவிரவாதிகள் தாக்குதலை நடத்துகிறார்கள்.
லாரியை விட்டு கொல்வது, கட்டிடத்தில் இருந்து கீழே பிடித்து தள்ளி கொல்வது, தலையில் கல்லை போட்டு படுகொலை செய்வது என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நோக்கம் கொலை மட்டுமே என்பதால், பாதுகாப்பு படையினர் திணறுகிறார்கள். இந்திய உளவுத்துறை, பாதுகாப்புத்துறையும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் வழிமுறை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.