வதந்தி வேண்டாம்.. இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டது சோட்டா ராஜன்தான்- சிபிஐ அறிவிப்பு
ஜகார்த்தா: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக விளங்கி அதன்பிறகு பகைவனாக மாறிய, சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று ஒரு தகவல் வெளியான நிலையில், கைதானது சோட்டா ராஜன் இல்லை என்று பரவிய தகவலால் குழப்பம் ஏற்பட்டது.
நிழலுலக தாதா சோட்டா ராஜனை போலவே, இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் சயனைடு மோகன். கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களை பலாத்காரம் செய்து சயனைடு கொடுத்து கொன்றவர். மங்களூர் கோர்ட்டில் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தலைமறைவாக உள்ள அவரையும் சர்வதேச போலீசார் தேடிக்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் கடந்த மாதம், ஆஸ்திரேலியாவில் சோட்டா ராஜன் தங்கியிருந்ததை அந்த நாட்டு போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அவர் பல நகரங்களிலும் தனது குடியிருப்பை மாற்றிக்கொண்டே இருந்ததால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில், இந்தோனேஷிய தலைநகர் பாலிக்கு அந்த நபர் தப்பிச் செல்வதை ஆஸ்திரேலிய போலீசார் கண்டறிந்து, இந்தோனேஷிய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இரு நாட்டு காவல்துறை கூட்டுறவுடன், இன்டர்போல் போலீசார், நேற்று சோட்டா ராஜனை கைது செய்தனர். இதுகுறித்து இந்திய அரசுக்கு இந்தோனேஷியா தகவல் கொடுத்தது.
பல்வேறு கொலைவழக்குகளில் தேடப்படுபவர், இன்டர்போலால் ரெட் அலர்ட் செய்யப்பட்டவர் என்றெல்லாம் இந்தோனேஷியா கூறியதை கேட்டு, அது சோட்டா ராஜன் என்று இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆஸ்திரேலிய போலீசாரும், அது சோட்டா ராஜன் என்றுதான் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிடிபட்டது சயனைடு மோகன் என்று ஒரு தகவல் இந்திய ஆங்கில மீடியாக்களில் வெளியானது. இந்த குழப்பத்தை போக்க, சிபிஐ இந்தோனேஷிய அரசை தொடர்புகொண்டு, கைதான நபரின் போட்டோ ஆதாரத்தை கேட்டது.
இந்தோனேஷியா அனுப்பிய போட்டோ ஆதாரத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்டது சோட்டா ராஜன்தான் என்பதை சிபிஐ உறுதி செய்தது. சிபிஐ இயக்குநர் அனில் சின்ஹா இத்தகவலை பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, சோட்டா ராஜன், இன்டர்போலால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூதின் கும்பலில் சோட்டா ராஜன் 2வது நபராக இடம் பெற்றிருந்தார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தாவூதுக்கு எதிராக தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார் சோட்டா ராஜன். இதனால் இருவருக்குமிடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சோட்டா ராஜனின் கதையை முடிக்க தாவூத் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
picture credit: NCB-Interpol Indonesia