மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல்.. ஆங்சாங் சூயி கட்சி அமோக வெற்றி!!
யாங்கூன்: மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூயி-ன் தேசிய லீக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று வருகிறது.
மியான்மரில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக ராணுவ ஆட்சியே நடைபெற்று வருகிறது. 1990ஆம் ஆண்டு முதலாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஆங்சாங் சூயி கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தல் முடிவை ராணுவம் ஏற்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து சூயி கைது செய்யப்பட்டு சிறையிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார். கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் சூயி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக மெல்ல மெல்ல மியான்மரில் ஜனநாயகம் திரும்பத் தொடங்கியது. இதன் உச்சகட்டமாக நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது.
மியான்மர் நாடாளுமன்றத்தில் 440 இடங்களை கொண்ட கீழ்சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 25% இடங்கள் ராணுவத்தினருக்குரியது. அதை ராணுவத்தினரே நியமித்துக் கொள்வர்.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் நேற்று மாலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே சூயியின் தேசிய லீக் கட்சி தொடர்ந்து அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது.
யாங்கூன் மாகாணத்தில் 12 இடங்களில் சூயி கட்சி வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல் முடிவுகளும் செவ்வாய்க்கிழமை முழுமையாக வெளியாகும். தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என ஏற்கனவே அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.