10 மாத பயணத்திற்குப் பின்... செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது நாசாவின் மேவன்!
வாஷிங்டன்: நாசா அனுப்பிய மேவன் விண்கலம், கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமையன்று செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது.
இந்த மேவன் விண்கலமானது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆளில்லா விண்கலமாகும் இது.
செவ்வாய் கிரகத்தில் காலநிலை மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன, எப்படி குளிர் நிலை ஏற்படுகிறது, எப்படி வெப்ப நிலை ஏற்படுகிறது என்பதை மேவன் ஆராயவுள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.
கடந்த 10 மாதமாக, கிட்டத்தட்ட 711 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்து செவ்வாயின் சுற்று வட்டப் பாதைக்கு மேவன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி மேவன் விண்கலத்தை நாசா செலுத்தியது.