வானிலை ஆய்வுக்காக ரூ. 70,000 கோடி செலவில் ‘கோஸ் எஸ்’... வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா!
கோஸ் எஸ் செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது நாசா.
வாஷிங்டன்: வானிலை நிலவரங்களை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து கொள்ள வசதியாக, மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது நாசா.
வானிலை, விண்வெளி உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கென பல்வேறு செயற்கைக்கோள்களை அது விண்ணில் ஏவி வருகிறது.
அந்தவகையில், தற்போது கோஸ் (GOES S) என்ற செயற்கைக்கோளை அட்லஸ் 5 ராக்கெட் மூலம் விண்ணில் நாசா ஏவியுள்ளது. கேப் கேனவரலில் உள்ள தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மூலம் வானிலை நிலவரங்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ள இயலும். 11 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இதன் இந்திய மதிப்பு ரூ. 70 ஆயிரம் கோடி ஆகும்.
அமெரிக்காவின் மேற்குப் பிராந்தியம் அடிக்கடி புயல், காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் மண் சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் முன்கூட்டியே இவற்றை அறிந்து கொள்வதன் மூலம், பேரழிவுகளைத் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
வானிலை தொழில்நுட்பத்தில் நாசாவின் இந்த கோஸ் எஸ் செயற்கைக்கோள் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஈக்வடாருக்கு மேலே 22,000 மைல் உயர் சுற்றுவட்டப்பாதைக்கு இந்த செயற்கைக் கோள் சென்றடைந்தவுடன், அதன் பெயர் கோஸ்-17 என்று பெயர் பெறும்.
ஏற்கனவே கோஸ் 16 என்ற செயற்கைக்கோளை இதேபோன்ற ஆய்வுக்காக நாசா விண்ணில் அனுப்பியுள்ளது. அந்த செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் தான், டெக்சாஸ் காட்டுத்தீ நிவாரணம் மற்றும் மீட்புப்பணி துரிதப்படுத்தப்பட்டது. அதோடு இர்மா சூறாவளியின் தாறுமாறான பாதையையும் அது துல்லியமாக கணித்துக் கூறியது. அதே போல் ஒக்லஹாமா, டெக்ஸாஸ் காட்டுத்தீயை முன்கூட்டியே கணித்தது கோஸ் 16. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோஸ் 17 அனுப்பவுள்ள தகவல்கள் மற்றும் படங்களுக்காக விண்வெளி ஆய்வாளர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.