பெஷாவர் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் மீண்டும் தூக்கு தண்டனை அமல்!
இஸ்லாமாபாத்: பெஷாவரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை முறையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவந்துள்ளது பாகிஸ்தான் அரசு.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியேற்ற போது தூக்கு தண்டனை முறைக்கு இடைக்காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்நாட்டில் சுமார் 8 ஆயிரம் தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த அழுத்தத்தினால் இடைக்கால\மாக தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது பெஷாவரில் மிகக் கொடூரமாக பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து குழந்தைகள் 132 பேர் உட்பட 141 பேரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர் தலிபான் தீவிரவாதிகள். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சிறைகளில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் அனைவரையும் பெஷாவரில் வைத்தே தூக்கிலிட வேண்டும் என்று அந்நாட்டில் குரல் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப், தூக்கு தண்டனை நடைமுறைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதாகவும், இனி தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.