மலேரியாவைக் குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு... பில்கேட்ஸ் மகிழ்ச்சி!
டெக்சாஸ்: மலேரியா நோயைக் குணமாக்கவல்ல புதிய மருந்து ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த மருந்தின் ஆய்வகப் பெயர் டிஎஸ்எம் 265 ஆகும். இது மலேரியா ஒட்டுண்ணியின் பெருக்கத்தைப் பல்வேறு நிலைகளில் தடுத்து நிறுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஜர்னல் சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசனில் வெளிவந்துள்ளது.
இந்த மருந்தை மலேரியா பாதிப்புள்ள மக்களுக்கு அளித்து, தங்கள் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கி விட்டனர்.
டிஎஸ்எம் 265...
இது தொடர்பாக டெக்சாஸ் பல்கலைக்கழக மருந்தியலாளரும், இந்த மலேரியா மருந்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவருமான டாக்டர் மார்கிரெட் பிலிப்ஸ் கூறுகையில், "மலேரியா நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட முதல் சிங்கிள் டோஸ் மருந்து டிஎஸ்எம் 265 தான் ஆகும். இதனை மற்ற மருந்துகளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேம்படுத்தலாம்...
மேலும், "இந்த மருந்தை வாரம் ஒருமுறை பயன்படுத்துவது போல் மேம்படுத்த முடியும்" என்றும் அவர் கூறுகிறார்.
மலேரியா பாதிப்பு...
கடந்த 2013ம் ஆண்டு உலகம் முழுவதும் 189 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோயால் 5 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
அறிகுறிகள்...
கொசு மூலம் பரவும் மலேரியா நோயானது, மனித உடலில் பல ஆண்டுகள் வாழும் தன்மையுடையது. காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, குளிர், வியர்த்தல், தசை வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் இருமல் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
பக்கவிளைவுகள்...
மலேரியா ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை சுழற்சிக் காரணமாக இந்நோய்க்கு எதிராக மருந்துகள் போராடுவது கடினமாக உள்ளது. இது தவிர மலேரியா சிகிச்சைக்காக அளிக்கப் படும் மருந்துகள் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
தடுப்பூசி...
அப்போதைக்கு மலேரியா ஒட்டுண்ணிகளைக் கட்டுப் படுத்தும் மருந்துகள் அளிக்கப் பட்டு வந்தாலும், இதுவரை இந்நோய்க்கு தடுப்பு ஊசி எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இது தொடர்பான ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கூண்டோடு அளிக்கும்...
இந்நிலையில், தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்தானது மலேரியா ஒட்டுண்ணிகளை கூண்டோடு அளிக்கும் திறன் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புரோட்டின்...
மலேரியா ஒட்டுண்ணி பல்கிப் பெருகப் பயன்படும் புரோட்டின் பொருட்களை இந்தப் புதிய மருந்து குறி வைத்து செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
|
பில்கேட்ஸ் மகிழ்ச்சி...
இந்த ஆய்வுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் - மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிதியுதவி செய்கிறது. இந்த ஆய்வு முன்னேற்றம் தொடர்பாக பில் கேட்ஸும் மகிழ்ச்சி தெரிவித்து டிவிட் வெளியிட்டுள்ளார்.