தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு ரூ 12 ஆயிரம் ‘வெகுமதி’ கூப்பன்: மது, சிகரெட் வாங்கியதால் பரபரப்பு
லண்டன்: இளம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட வெகுமதி கூப்பன்களை பயன்படுத்தி அதிக அள்வில் சிகரெட்டும், மதுவும் வாங்கப் பட்டதால் இங்கிலாந்து அரசு அதிர்ந்து போயுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலேயே தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைவாக இருக்கும் டெர்பிஷெரி, சவுத் யார்க்ஷெரி ஆகிய நகரங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தினார்கள். குழந்தையின் முதல் உணவான நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்த தாய்ப்பாலை சிலத் தாய்மார்கள் தரத் தயங்குகிறார்கள்.
காரணம் அதன் மூலம் தங்களாது அழகு சீர்குலைந்து விடும் என்ற அச்சமே. ஆனால், தாய்ப்பால் தருவதன் மூலம் குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் உடல் ரீதியாக அதிக நன்மைகள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை.
எனவே, வெகுமதிப் பரிசுகள் கொடுத்தாலாவது, தாய்ப்பால் தரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய முடிவு செய்தது இங்கிலாந்து அரசு. அதன்படி, இங்கிலாந்து நாட்டில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனம் மூலம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வெகுமானம் கொடுக்கும் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.
அதன்படி குழந்தைக்கு 6 வாரம் வரையில் தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு ரூ.12 ஆயிரமும், 6 மாதங்கள் வரையில் பால் கொடுக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரமும் வெகுமதியாக (கிப்டு வவுச்சர்) வழங்கப்பட்டது.
அந்த கூப்பன்களைப் பயன் படுத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, உபயோகமான பொருட்கள் வாங்குவார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கூப்பனைப் பெற்ற பெரும்பான்மையானவர்கள் அதனைப் பயன் படுத்தி சிகரெட், மது போன்ற போதைப் பொருட்களைத் தான் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளதாம்.