விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் உடைமைகள் மாயம்!
கெய்ர்ன்ஸ்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் உடைமைகள் விமான நிலையத்தில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் உலகின் நிதி அமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்களுக்கான ஜி-20 மாநாடு இந்த வாரத்தின் இறுதியில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பில், மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏர் இந்தியா விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்தார்.
உடைமைகள் பரிசோதனை:
சிட்னியில் இறங்கி கெய்ர்ன்ஸ் செல்வதற்காக இணைப்பு விமானத்தில் செல்லும் முன் விமானநிலையத்தில் உடைமைகள் பரிசோதனைக்கு அனுப்பட்டது.
மாயமான உடைமைகள்:
ஆனால் பரிசோதனைக்கு பிறகு தனது உடைமைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
டுவிட்டரில் தகவல்:
இந்த தகவலை டிவிட்டரில் தெரிவித்த நிர்மலா சீத்தாரமன், " இணைப்பு விமானத்தை பிடிப்பதற்காக சிட்னியில் இறங்கினோம். பரிசோதனை செய்யப்பட்ட எனது உடமைகள் கண்டு பிடிக்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.
வழக்கமான உடைகள்:
சிறிது நேரம் கழித்து வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், "கெய்ர்ன்ஸ் செல்வதற்கான இணைப்பு விமானத்தில் உள்ளோம். சூட்கேஸில் இருந்த எனது வழக்கமான உடைகள் அனைத்தும் மாயமாகியுள்ளது.
ஆபத்தான நிலைமை:
கெய்ர்ன்ஸில் புடவைகளை வாங்க முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை. நிலைமை ஆபத்தாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
உடைமைகள் கண்டுபிடிப்பு:
இதனிடையே, காணாமல் போன உடைமைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஆறு மணிநேரத்தில் கெய்ர்ன்ஸுக்கு அது சென்றடையும் என்று ஏர் இந்தியா மேலாளர் மாது மாதேன் தெரிவித்துள்ளார்.