நிதாகத் பிரச்சனையால் ரியாத்தில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடுவீர்!
ரியாத்: நிதாகத் பிரச்சனையால் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி செய்யுமாறு ரியாத் தமிழ்ச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 6 மாதங்களாக "நிதாகத்" பிரச்னையால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் பலருக்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் பலவகைகளிலும் உதவி செய்து வருவதை அறிவீர்கள். இதுவரை 34,000 ரியாலிற்கும் அதிகமான தொகைக்கு உணவு, பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பலருக்கும் தூதரகத்திலும், தர்ஹீலிலும் முழுநேர பணியாற்றப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தாயகம் திரும்பியிருந்தாலும் சிலருக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாயகம் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டு ரியாத் பூங்காவில் சுற்றித்திரிந்த பலரையும் சி.ஆர்.பி மருத்துவமணைக்கு அருகில் தங்கவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் இந்திய ப்ரெடர்னிட்டி ஃபோரம் தமிழ்ப் பிரிவுடன் இணைந்து இந்தியத் தூதரகத்தின் மூலம் அவர்களுக்குண்டான முறையான ஏற்பாடுகளைச் செய்து ஒவ்வொருவராக தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தாயகத்திற்கு செல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தில் இருந்து தற்போது 175 ஆக குறைந்துள்ளது, அவர்களில் 53 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைவரையும் தாயகம் அனுப்பி வைக்கும் வரை உணவு ஏற்பாடுகளுக்கும், தாயகம் செல்ல டிக்கெட் ஏற்பாட்டிற்கும் பெரிய அளவில் பொருள் தேவைப்படுகிறது.
அனைத்து இந்திய சமுதாய ஆர்வலர்களும் களமிறங்கியிருக்கும் இத்தருணத்தில், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் தமிழர்களாகவும் இருப்பதால் உங்களின் மேலான உதவியை வழங்கி உதவிடுமாறு ரியாத் தமிழ்ச் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
தொடர்புக்கு: அஹமது இம்தியாஸ் (0540753261), சாஹீல் ஹமீத், (0504450473), ஜவஹர் சவரிமுத்து (0508179159), ஹைதர் அலி (0593631616)