உளவியல் ரீதியில் முடிவு எடுப்பது குறித்த ஆய்வு... அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காக அமெரிக்க பேராசிரியர் ரிச்சர்ட் எச். தாலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காக ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு தேர்வுக் குழுவால் அமெரிக்க பொருளாதாரத் துறை பேராசிரியர் ரிச்சர்ட் எச். தாலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டு தோறும் மருத்துவம், கலை, அறிவியல் என்று ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கண்ட துறைகளில் பொருளாதாரத்தை தவிர்த்து மற்ற துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை ஸ்வீடனின் ஸ்டாக் ஹோமில் நோபல் பரிசு குழுத் தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார். அதில் அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ரிச்சர்ட் எச். தாலர் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் உளவியல் ரீதியில் முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வில் முன்னோடி என்பதால் அவர் இந்த பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ரூ.7 கோடிக்கான பரிசுத் தொகையும் வழங்கப்படும். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.