'லெட்ஸ் டேக் செல்ஃபி புள்ள...' 38 நோயாளிகளை கொன்று சடலத்தோடு செல்ஃபி எடுத்த நர்ஸ் கைது!
ரோம்: உடல் நலக்குறைவாலோ அல்லது உறவினர்களின் நச்சரிப்பாலோ தொல்லையாக கருதும் நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்து அந்த சடலங்களுடன் நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நர்ஸ் இத்தாலியில் கைது செய்யப்பட்டுளார். இதுவரை 38 நோயாளிகளை இதுபோல அவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள லூகோ மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தவர் டேனியலா போக்கியலி (42). சமீபத்தில் இவரின் வார்டில் சிகிச்சை பெற்ற ரோசா கல்டரோனி என்ற 78 வயது வயதான பெண் மர்மமாக மரணமடைந்தார். எனவே உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது உடலில் அளவுக்கு அதிகமாக பொட்டாசியம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ரோசா இறந்திருப்பதும் உறுதியானது.
அப்போதுதான் இதற்கு காரணம் நர்ஸ் டேனியலா போட்ட ஊசி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டேனியலாவை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் சுமார் 38 நோயாளிகளுக்கு இப்படி ஊசி போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கொலையும் செய்துவிட்டு தனது ஸ்மார்ட்போனில் பிணங்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்வது டேனியலா வாடிக்கை. அவரது போனை ஆய்வு செய்தபோது இது தெரியவந்துள்ளது.
அதிகமாக அக்கறை எடுத்து கவனிக்க வேண்டிய நோயாளிகள் வந்தால், வேலை செய்ய சோம்பேறித்தனம்பட்டுக் கொண்டு, அந்த நோயாளிகளுக்கு விஷ ஊசி போடுவது டேனியலா வழக்கமாம். மேலும், நோயாளியின் உறவினர்கள் யாராவது சிடுமூஞ்சியாக இருந்து, நர்சுகளை திட்டிக்கொண்டே இருந்தாலும், அந்த நோயாளிகளுக்கும் இதே கதிதானாம். இப்படித்தான் 38 பேரை கொலை செய்துள்ளார் இந்த 'புண்ணியவதி' நர்ஸ்.
உலகம் எங்கிலும் தமிழ், மலையாள நர்சுகளுக்கு அதிக டிமாண்ட் இருக்க காரணம் அவர்களின் பொறுமைதான் என சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். இதுபோன்ற இத்தாலி நர்சுகள் அதை உறுதி செய்கிறார்கள்.