என்னா ஒரு கடமையுணர்வு.... குழந்தை என நினைத்து கார் கண்ணாடியை உடைத்து ‘பொம்மை’யை மீட்ட போலீஸார்!
ஓக்லாண்ட்: அமெரிக்காவின் ஓக்லாண்ட் பகுதியில் காருக்குள் குழந்தை ஒன்று சிக்கியிருப்பதாக தவறுதலாக நினைத்த போலீஸார், காரின் கண்ணாடி கதவை உடைத்தனர். பின்னர் தான் தெரிந்தது காருக்குள் இருந்தது குழந்தையல்ல, பொம்மை என்று.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது ஓக்லாண்ட். இங்கு கடந்த திங்களன்று கார் ஒன்று சாலையோரமாக நின்றிருந்தது. அந்தக் காரின் பின்பக்க சீட்டில் கைக்குழந்தை ஒன்று அமர்ந்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. வெயில் காரணமாக அக்குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

விரைந்து வந்த போலீஸார் காரின் உரிமையாளரைத் தேடினர். அவர் கிடைக்காததால், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற, கார்க் கதவின் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் உள்ளேயிருந்த குழந்தையை மீட்ட போலீசாருக்கு அதிர்ச்சி. காரணம், அது நிஜக் குழந்தையல்ல, பொம்மை.
இவ்வாறு குழந்தையைக் காரில் வைத்துச் சென்ற நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனபோதும் பொம்மையை குழந்தை என நம்பி ஏமாந்தாலும், விரைந்து செயல்பட்டதற்காக போலீஸாரைப் பொதுமக்கள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications