வெள்ளை மாளிகையில் கால்பதித்த புதிய இந்தியர்– ஆலோசனைக் குழு உறுப்பினராக அஜய் நியமனம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்தியர் ஒருவரை நியமித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
அமெரிக்காவில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் தலைவராக செயல்பட்டு வந்தவர் அஜய் பங்கா. இந்தியரான இவர் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக்குழு உறுப்பினராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உயரிய நிர்வாக பொறுப்புக்கு அஜய் பங்காவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவருடன் மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஒபாமா கூறுகையில், "திறமையும், அனுபவமும் வாய்ந்த இந்த பணியாளர்கள் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்குவார்கள். இவர்களின் சிறந்த பணிகளுக்காக நன்றி கூறுவதுடன் இவர் களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்" என்றார்.
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங் கலை பட்டப்படிப்பை முடித்த அஜய் பங்கா, ஆமதாபாத் இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.
பின்னர் இவர் இந்தியா மற்றும் அமெரிக்காவில் பல்வேறு சர்வதேச வணிக நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.