அமெரிக்காவை 'விரட்டியடித்த' வியட்நாம் கம்யூ. தலைவருக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா விருந்து
வாஷிங்டன்: வியட்நாம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி பொதுச்செயலாளர் குயொன் குயென் ஃபுத் ரொங்க்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஒபாமா விருந்தளித்தார். வியட்நாம் சோசலிச குடியரசு உருவான பின்னர் அந்நாட்டின் மூத்த தலைவர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் முதல் முறையாக விருந்தளிக்கப்பட்டது வரலாற்று நிகழ்வாகும்.
1950களின் இறுதியில் வடவியட்நாமுக்கு எதிராக தென்வியட்நாமுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்கியது. வரலாற்றின் பக்கங்களில் வியட்நாம் - அமெரிக்கா போர் என அழைக்கப்படும் இந்த சரித்திரத்தில் ஓட ஓட அமெரிக்கா படைகள் விரட்டியடிக்கப்பட்டு இருவியட்நாம் நாடுகளும் இணைக்கப்பட்டு 'வியட்நாம் சுதந்திர சோசலிச குடியரசு' உருவாக்கப்பட்டது. இப்போரில் அமெரிக்கா படைகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன.
40 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை மாதம்தான் அமெரிக்கா- வியட்நாம் யுத்தம் முடிவுக்கும் வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அமெரிக்கா- வியட்நாம் இடையேயான உறவு புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வருகை தந்த வியட்நாம் சோசலிச குடியரசின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி பொதுச்செயலர் குயென் ஃபுத்ரொங்குக்கு அதிபர் ஒபாமா விருந்தளித்தார். இது இருநாடுகளிடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும் வியட்நாமுக்கு வருகை தருமாறு ஒபாமாவுக்கும் ஃபுத்ரொங் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பு நடைபெற்ற நேரத்தில் வியட்நாம் போரில் அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதைக் கண்டிக்கும் வகையில் வெள்ளை மாளிகைக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தென்சீனா கடல் யாருக்கு உரிமை என்பதில் சீனாவுடன் மோதிக் கொண்டிருக்கிறது வியட்நாம். வியட்நாமுக்கு ஆதரவாக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.