துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அறிவிக்கையில் ஒபாமா பொல, பொலவென கண்ணீர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை குடிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவிக்கையில் அதிபர் ஒபாமா அழுதுவிட்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிக் குழந்தைகள் கூட துப்பாக்கி வைத்திருக்கும் அவல நிலை அமெரிக்காவில் உள்ளது. இந்நிலையில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அதிபர் ஒபாமா புதிய விதிமுறைகளை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பை வெளியிடுகையில் அவரது கண்ணில் இருந்து கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிந்தோடியது. அறிவிப்பு வெளியிடுகையில் ஒபாமா கூறியதாவது,

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கனக்டிகட் துவக்க பள்ளியில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டதை நினைக்கும்போது எல்லாம் கவலையாக உள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் காங்கிரஸை வேண்டுமானால் தற்போது தனது வசம் வைத்திருக்கலாம், ஆனால் அமெரிக்காவை தனது வசம் வைக்க முடியாது.
சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சார்லஸ்டனில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது.
கன்சாஸ் சிட்டியில் யூதர்களுக்கும், சாப்பல் ஹில்ஸில் முஸ்லீம்களுக்கும், ஓக் கிரீக்கில் சீக்கியர்களுக்கும் அந்த உரிமை மறுக்கப்பட்டது. அரோரா மற்றும் லபாயட்டில் படத்திற்கு சென்றவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு இடத்தில் அமைதியாக கூடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
நிம்மதியாக வாழும், சந்தோஷமாக இருக்கும் உரிமை பிளாக்ஸ்பர்க் மற்றும் சான்டா பார்பரா கல்லூரி மாணவர்கள், கொலம்பினின் பள்ளி மாணவர்கள் மற்றும் நியூடயுனில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை.
முதல் வகுப்பு படித்தவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியாவார்கள் என்று அவர்களின் குடும்பத்தார் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த குழந்தைகளை பற்றி எப்பொழுது நினைத்தாலும் வருத்தமாக உள்ளது. சிகாகோவின் தெருக்களில் அது தினமும் நடக்கிறது.
துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க காங்கிரஸ் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். துப்பாக்கி விற்பனை செய்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற வேண்டும். மேலும் துப்பாக்கியை வாங்குவோரின் பின்னணி குறித்து விசாரித்த பிறகே விற்பனை செய்ய வேண்டும்.
இந்த பிரச்சனையை தீர்ப்பது குறித்து சிந்திக்காமல் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
அந்த சட்டங்களை வரவிடாமல் காங்கிரஸ் தடுப்பதற்கு அது தேர்தலில் வெற்றி பெற விரும்புவது தான் காரணம். அவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்பதை நீங்கள் புரிய வைத்தால் அவர்கள் தங்களின் பாதையை மாற்றுவார்கள்.
துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான சட்ட நிறைவேற்றம் எல்லாம் ஒரே இரவில் நடந்துவிடாது. இந்த காங்கிரஸில் நடக்காது. எனது அதிபர் பதவிக்காலத்தில் நடக்காது. பெண்களுக்கான வாக்குரிமை ஒரே இரவில் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு விடுதலை ஒரே இரவில் கிடைக்கவில்லை. ஒரு விஷயம் கடினம் என்பதால் அதை முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications