ஊழல் வழக்கு விசாரணைக்கு போனாலே கொரோனா.. கிலியில் பாக். எதிர்க்கட்சி தலைவர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஊழல் வழக்கு சென்றுவிட்டு திரும்பும் அரசியல் தலைவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிய நாடுகளில் இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு மிகவேகமாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,35,864 ஆக அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தானில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,596 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 50 ஆயிரம் குணமடைந்தும் உள்ளனர்.
சென்னையில் 8ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் வேதனை
கிலானிக்கு கொரோனா
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்தான் மிக மோசமாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதம யூசுப் ரசா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஊழல் வழக்கில் விசாரணை ஆணையம் முன்பாக சனிக்கிழமையன்று கிலானி ஆஜராகி இருந்தார். இதன் பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கிலானிக்கு கொரோனா உறுதியானது.
எதிர்க்கட்சி தலைவருக்கு கொரோனா
முன்னதாக கடந்த வியாழன்று பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஷேபாஸ் ஷரீப்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரும் அன்னியசெலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
விசாரணைக்கு போனால் கொரோனா
பாகிஸ்தானில் ஊழல் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகும் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக கிலானியின் மகன் காசிம் கிலானி தமது ட்விட்டர் பக்கத்தில், என் தந்தையின் வாழ்க்கையை அபாயத்தில் சிக்க வைத்த இம்ரான்கான் அரசும் விசாரணை ஆணையத்துக்கும் நன்றி என பதிவிட்டிருக்கிறார்.
அப்ரிதிக்கும் கொரோனா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிதிக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை அவரே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் தாம் குணமடைய வேண்டும் என்பதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அப்ரிதி கேட்டுக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.