370-வது பிரிவு பற்றி விவாதிக்கலையா? பாக். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பெரும் அமளி!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது குறித்து விவாதிக்க வலியுறுத்தி பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை அதிபர் ஆரிப் அலி இன்று கூட்டுவதாக அறிவித்திருந்தார். இன்று காலை நாடாளுமன்றம் கூடியதுமே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
எம்.பிக்களுக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸில், எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு, காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிப்பு குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 370-வது பிரிவு குறித்து ஏன் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஆசாத் குய்செர், 370-வது பிரிவு குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது என குறிப்பிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்து அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகளை 20 நிமிடம் ஒத்திவைத்தார் சபாநாயகர்.
இன்றைய கூட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.