பாகிஸ்தானில் சம்பளம் ‛கட்’.. கழுத்தை இறுக்கும் பொருளாதார நெருக்கடியால்.. அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கையை அறிவிக்க உள்ளது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடி வரும் நிலையில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்த தேசிய சிக்கனக் குழு (என்ஏசி) அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10% குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே நீடித்து வந்த பணவீக்கம் அதனையடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் போன்ற பாதிப்புகளால் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்திருந்த நிலையில் தற்போது அரசு மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கையும் சாமானிய மக்களின் தலையில்தான் வந்து விழும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த நெருக்கடிக்கு மின்சாரத்துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்நாட்டின் மின்சாரத்துறையை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 2.253 லட்சம் கோடியாக இருந்த கடன் ஒரே ஆண்டில் மட்டும் சுமார் 2.437 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எனவே இரவு 8.30 மணிக்கு மேல் கடைகள், ஷாப்பிங் மால்கள், சந்தைகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது திருமண மண்டபங்களில் 10.30 மணியுடன் மின்சாரம் நிறுத்தப்படும்.
எம்ஜிஆர் -கருணாநிதி -ஜெயலலிதா நினைவிடங்களை பார்க்க 2 நாட்களுக்கு அனுமதியில்லை! என்ன காரணம் தெரியுமா?
கடன்
அதேபோல தேநீர் இறக்குமதிக்கு அதிக அந்நிய செலாவனி பயன்படுத்தப்படுவதால் அதன் இறக்குமதி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே தேநீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இப்படியான சில கட்டுப்பாடுகள் மூலம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்கலாம் என்று கூறியுள்ளது. இருப்பினும் நிதியை போதிய அளவு சேமிக்க முடியவில்லை. எனவே அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை ரூ.2,500 கோடியை கொடுக்க முடியவில்லை. அதேபோல பணி செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் உரிய நேரத்தில் கொடுக்கப்படாமல் 10-20 நாட்கள் கடந்து வழங்கப்படுகிறது.
சம்பள வெட்டு
எனவே இந்த சிரமங்களை போக்க பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் 'தேசிய சிக்கனக் குழுவை' பிரதமர் கடந்த வாரம் அமைத்தார். இதனையடுத்து இந்த குழு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10% குறைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல அமைச்சகங்களின் செலவினங்களை 15% குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மத்திய/மாநில அமைச்சர்களின் ஆலோசகர்கள் எண்ணிக்கையை 78ல் இருந்து 30 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆட்குறைப்பு
அமைச்சர்களின் உதவியாளர்கள் மட்டுமல்லாது பிரதமரின் சிறப்பு உதவியாளர்களின் எண்ணிக்கையிலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கெள்ளப்பட இருக்கிறது. அதேபோல இயற்கைத் திட்டங்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிதியை பெருமளவு சுருக்க சிக்கனக் குழு முடிவெடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். அதேபோல அந்நாட்டின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) மற்றும் இன்டலிஜென்ஸ் பீரோ (ஐபி) போன்றவற்றிற்கான நிதியையும் குறைக்க திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு
ஆனால் இது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் இதனை சாத்தியப்படுத்த பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது. மறுபுறம் நிதி ஆதாரத்திற்காக பாகிஸ்தான் அரசு ஐஎம்எஃப்-ஐ நாடியுள்ளது. கடன் வழங்குவதற்கு ஐஎம்எஃப் தயாராக இருந்தாலும் அது விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க பாகிஸ்தான் தொடர்ந்து தயங்கி வருகிறது. இதன் காரணமாக கடன் பெறுவதில் தாமதம் நீடித்து வருகிறது. கடன், பணவீக்கம், அந்நிய செலாவணி குறைவு, இதனை சமாளிக்க சிக்கனக் குழு என அரசின் செயல்பாடுகள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
இது குறித்து அமைச்சர் ஒருவர் கூறுகையில், "சிக்கனக் குழு பல்வேறு ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை அரசால் முழுமையாக செயல்படுத்த முடியாது. ஏனெனில் இப்படி செயல்படுத்தினால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும். மட்டுமல்லாது இதனை செயல்படுத்த விடாமல் பல முனைகளிலிருந்து எதிர்ப்பு மேலெழும். எனவே இந்த பரிந்துரைகள் தற்போதைய பதற்றமான சூழலில் மேலும் ஒரு சூடான விவாதத்தை மட்டுமே கிளப்பும்" என்று கூறியுள்ளார். சிக்கனக் குழு தன் பரிந்துரையை விரைவில் அரசிடம் தாக்கல் செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.