ட்விஸ்ட்! திரும்பிய வரலாறு.. பதவியை இழந்த இம்ரான் கான்? பிரதமராக இல்லை என அதிரடி அறிவிப்பு வெளியீடு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்த நிலையில், இம்ரான் கான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், கடைசி பந்து வரை விளையாடுவேன் ராஜினாமா செய்யப்போவது இல்லை என அவர் கூறியிருந்தார்.
இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், அதிரடி திருப்பமாக இவ்விவகாரத்திம் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டி துணை சபாநாயகர் காசிம் சூரி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

பிரதமர் இம்ரான் கான்
மேலும் இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி தேசிய சட்டமன்றத்தை கலைத்ததோடு காபந்து பிரதமராக இம்ரான் கானே நீடிப்பார் எனவும், 3 மாதங்களில் அங்கு மீண்டும் தேர்தல் நடக்கும் என கூறப்பட்டது. இதற்கிடையில் 195 உறுப்பினர்களின் ஆதரவுடன் PML-N தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக எதிர்க்கட்சி அணி அறிவித்தது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீண்டும் செல்லுபடியாக்கும் வகையில் சபாநாயகராக அயாஸ் சாதிக்கும் நியமிக்கப்பட்டார்.

ராணுவ தலையீடு புகார்
இம்ரான் விவகாரத்தில் ராணுவ தலையீடு இருப்பதாக இம்ரான் குற்றம் சாட்டிய நிலையில், சக்திவாய்ந்த பாகிஸ்தான் இராணுவம் நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகளில் ராணுவத்துக்கு எந்த பங்கும் இல்லை என கூறிவிட்டது. இதுகுறித்துப் பேசிய பாக் இராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறுகையில், "அரசியல் தற்போது நடக்கும் நிகழ்வுகளுக்கும் ராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை." என தெளிவுபடுத்தியுள்ளார்.

திடீர் திருப்பம்
சட்டசபை கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், தேசிய சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியால் கூறப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளும் நடவடிக்கைகளும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டது என்று கூறினார். இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக , இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

பதவியில் இல்லை
"பாகிஸ்தான் ஜனாதிபதியால் பாகிஸ்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக, 3 ஏப்ரல் 2022 தேதியிட்ட பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் மூலம், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் 48(1) வது பிரிவுடன் 58(1) இன் படி , திரு இம்ரான் அஹ்மத் கான் நியாசி, பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நிறுத்தி வைக்கப்படுகிறார் " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி சட்டமன்றத்தை கலைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பாகிஸ்தான் பிரதமரும் முழுமையாக பதவியில் நீடித்ததில்லை என்ற நிலையில், இம்ரானும் பதவியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications