நாடு தழுவிய போராட்டத்திற்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு.. பாகிஸ்தானில் உச்ச கட்ட பதற்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் நேற்று பேரணியின் போது துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், விரைவில் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளாதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் அண்டு நடந்த தேர்தலின் போது அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சா கட்சி ஆட்சியை பிடித்தது.
இதில் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், பாகிஸ்தானில் ஆட்சி செய்து வந்தார்.

பாகிஸ்தான் பிரதமர்
ஆனால் அவரால் நீண்ட நாட்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருக்க முடியவில்லை. அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டதால் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியதால் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

பேரணி நடத்திய இம்ரான் கான்
இதனால் எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கான் ஆளும் கட்சியான பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரது தலைமையிலான அரசுக்கு எதிராக போராடியும், தேர்தல் நடத்துமாறும் இம்ரான் கான் போராட்டம் மற்றும் பேரணி நடத்தி வந்தார். அந்த வகையில் நேற்று அவர் பஞ்சாப் மாகாணம் வாஜிராபாத் அருகே பேரணி நடத்தினார். கண்டெய்னர் லாரியில் அமர்ந்தபடி அவர் பேசி வந்தார்.

தீவிர சிகிச்சை
அவரது கண்டெய்னர் அல்லாபாத் சவுக் என்ற இடத்துக்கு அருகே வந்த போது அங்கே பதுங்கியிருந்த ஒருவர் திடீரென இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து உடனடியாக இம்ரான் கான் மீட்கப்பட்டு அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உயிருக்கு பாதிப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவரை கொல்ல வேண்டும் என சுட்டேன்
இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டின்போது இம்ரான் கானின் தீவிர ஆதரவாளர்கள் 2 உள்பட 6 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றனர். இதேபோல் இம்ரான் கான் மீது துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், "இம்ரான்கான் நாட்டை தவறாக வழிநடத்துகிறார். என்னால் அதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எனவே தான் அவரை கொல்ல வேண்டும் என துப்பாக்கியால் சுட்டேன்" என கூறினார்.

நாடு தழுவிய போராட்டம்
பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அந்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே, இம்ரான் கானின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அவரது கட்சியின் அசாத் உமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இந்த போராட்டங்கள் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறார்.

உடனடியாக தேர்தல் வேண்டும்
உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதோடு ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இம்ரான் கான் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இம்ரான் கான் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு நாடு முழுவதும் பரபரப்பையும் ஒரு வித அசாதாரண சூழலையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக அவரது கட்சியினர் அறிவித்து இருப்பது பாகிஸ்தானில் உச்ச கட்ட பதற்றத்தையும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications