அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார்.. கடைசி நேரத்தில் தப்பித்த இம்ரான் கான்! பாகிஸ்தானில் திக்திக்
இம்ரான் கானிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இப்போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தோஷகானா வழக்கில் கைது செய்ய அந்நாட்டு போலீசார் அவரது இல்லத்திற்கு விரைந்தனர். இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உச்சத்தில் உள்ளது. இதைச் சமாளிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் கூட உதவி கேட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க அங்கு அரசியல் ரீதியாகவும் பல குழப்பங்கள் தொடர்ந்து இருந்தே வருகிறது. இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையில் தற்போதைய அரசு இறங்கியுள்ளது.

பாகிஸ்தான்
இதற்காக போலீசார் இன்று அவர்களின் வீட்டிற்குச் சென்றனர். இருப்பினும், அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் லாகூரில் இருக்கும் இம்ரான் கான் வீட்டின் முன்பு திரண்டனர். அவர்களின் எதிர்ப்பை மீறி போலீசார் இல்லத்திற்குள் நுழைந்தனர். அங்குத் திரண்டிருந்தவர்களைக் கடந்து போலீசார் உள்ளே சென்ற போதிலும், அங்கு இம்ரான் கானை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

பரபர குற்றச்சாட்டு
இதற்கிடையே தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வா மீது இம்ரான் கான் தனது ட்விட்டரில் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இம்ரான் கான் தனது ட்விட்டரில், "ஷெரீப் மீது 8 பில்லியன் பண மோசடி வழக்கிலும் 16 பில்லியன் ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட இருந்தார். அப்போது ஜெனரல் பஜ்வா தான் அவரை காப்பாற்றினார். இந்த விசாரணைகளை ஒத்திவைத்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஷெரீப் பிரதமராகிவிட்டார்.

எதிர்காலம் எப்படியிருக்கும்
இதையடுத்து தனது வழக்குகளை விசாரிக்கும் அமைப்புகளின் தலைவர்களை அவரே தேர்வு செய்துள்ளார். இந்த ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தனக்கு ஏற்ற அதிகாரிகளை அவர் தேர்வு செய்துள்ளார். இதுபோன்ற நபர்களிடம் நாடு சென்றால் எதிர்காலம் எப்படி இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே இம்ரான் கானை கைது செய்ய முடியவில்லை என்று பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "அதிகாரிகள் அவரது அறைக்குச் சென்றனர். இருப்பினும், அங்கு இம்ரான் கான் இல்லை. இதனால் அவரை எங்களால் கைது செய்ய முடியவில்லை" என்றார்.

ஆலோசனை
இதற்கிடையே பகல் 2.30 மணியளவில் இம்ரான் கான் தனது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மாலை செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான், தோஷகானா வழக்கில் பொது விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுத உள்ளதாகவும் தன் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் தெரிவித்தார். முன்னதாக இன்று போலீசார் இம்ரான் கானின் லாகூர் வீட்டை அடைந்தபோது, போராட்டக்காரர்கள் அவர்களை உள்ளே விடவில்லை.

தலைமறைவு
இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டால் நாடு முழுக்க மிக பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். இருப்பினும், தோஷகானா வழக்கின் விசாரணையில் ஆஜராகாததால், பாக். செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இருப்பினும், போலீசார் அங்குச் செல்லும் முன்பே, இம்ரான் கான் அங்கிருந்து வெளியேறிவிட்டார் எனத் தெரிகிறது.

என்ன வழக்கு
தோஷகானா விவகாரத்தில் தான் இம்ரான் கான் மீது இப்போது பிடி வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது.. தோஷகானா என்பது வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பரிசுகள் வைக்கப்படும் அரசாங்க களஞ்சியமாகும். இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பரிசுகளைக் களஞ்சியத்திற்கு அனுப்பாமல் தன்னிடம் வைத்துக் கொண்டதாகவே இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications