ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்.. கஸ்டடியில் விசாரணை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறியதாக ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஃபைஸ் ஹமீதுவிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஃபைஸ் ஹமீத், ஒருகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். இந்நிலையில், முறைகேடு புகார் தொடர்பாக ஃபைஸ் ஹமீதை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், அவர் மீது இராணுவ நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

ஓய்வுக்குப் பின் பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறும் வகையில் ஃபைஸ் ஹமீது பல செயல்களில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் விதிகளின் கீழ் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.
ஒருகாலத்தில் பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நபராக விளங்கியவர் ஃபைஸ் ஹமீது. அப்போதைய ஐஎஸ்ஐ தலைவரும் தற்போதைய இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் மீது பிரதமராக இருந்த இம்ரான் கான் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு ஹமீத் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீது, 2019 முதல் 2021 வரை ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக இருந்தபோது மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்பட்டார்.
இதற்கிடையே, தற்போதைய இராணுவத் தளபதி முனீர் பதவியேற்ற பின்னர், தான் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், நவம்பர் 2022இல் ஃபைஸ் ஹமீது முன்கூட்டியே ஓய்வு பெற்றார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications