ஆப்கனில் உள்ள இந்திய கட்டிடங்களை குறிவையுங்கள்.. தலிபான்களுக்கு பாகிஸ்தான் உத்தரவு?.. பகீர் தகவல்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய சொத்துக்கள், இந்திய கட்டிடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும்படி ஜிகாதி ஆயுதப் போராளிகள் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கி கொண்டுள்ள நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வர தொடங்கியுள்ளனர்.
400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாகவும், முக்கிய நகரங்கள், முக்கியமான சாலைகள் மற்றும் எல்லை பகுதிகள் தற்போது தலிபான்கள் வசம் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு
ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அரசு தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஜிகாதி ஆயுதப் போராளிகள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டதாகவும், தலிபான்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னிலையில் நேரடியாக குற்றம் சாட்டினார்.

இந்திய சொத்துகளை தாக்குங்கள்
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய சொத்துக்கள், இந்திய கட்டிடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும்படி ஜிகாதி ஆயுதப் போராளிகள் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் புனரமைப்பு முயற்சியிலும், டெலாராம் மற்றும் ஜரஞ்ச் சல்மா அணைக்கு இடையேயான 218 கி.மீ சாலையிலும் இந்திய அரசு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆப்கனில் இந்தியாவின் பங்களிப்பு
இதேபோல் ஆப்கானிய நாடாளுமன்ற கட்டிடதிலும் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் கல்வித்துறையில் பெரும் பங்களிப்பை செய்துள்ள இந்தியா ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து உதவியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முதல் இலக்கு இந்திய சொத்துக்களாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உளவுத்துறை மிக தெளிவாக கூறியதாக கூறப்படுகிறது.

வெளியேற உத்தரவு
காபூல் விமான நிலையத்தின் நிலைமையை மற்ற நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், கட்டுமானப் பணிகள் மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு இந்தியர்கள் இருப்பதை உன்னிப்பாக கவனித்து, அவர்களை வெளியேற செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications