மருத்துவமனையில் இடம் மாறிய இரு குழந்தைகள்... 20 வருடமாக நடக்கும் ஒரு வழக்கு
பாரிஸ்: பிரான்ஸ் மருத்துவமனையில் மாறிப் போய் விட்ட இரு குழந்தைகளுக்காக மருத்துவமனையின்மீது இன்று வரை நடந்துவருகின்ற விநோத வழக்கானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரஸ்சே நகரை சேர்ந்தவர் ஷோபி செர்ரானோ. கர்ப்பிணி ஆக இருந்த இவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு கிரஸ்சே அருகேயுள்ள கேன்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு மனோன் என பெயரிட்டனர். பிறந்தவுடன் மஞ்சள் காமாலை பாதித்த குழந்தைக்கு இன்கு பேட்டரில் வைத்து லைட் மூலம் சிகிச்சை அளித்தனர். அதே நேரத்தில் அங்கு பிறந்த மேலும் 2 குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருந்தது. அவற்றில் ஒன்று ஆண் குழந்தை.
ஆனால் இந்த மருத்துவமனையில் 2 இன்குபேட்டர் கருவி மட்டுமே இருந்தது. எனவே, மனோன் உள்ளிட்ட 2 பெண் குழந்தைகளை ஒரே இன்குபேட்டரில் வைத்திருந்தனர்.
அக்குழந்தைகளை கவனிக்க ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்விளக்கு திடீரென அணைந்து விட்டது. எனவே, நர்ஸ் குழந்தை மனோன்னையும், மற்றொரு பெண் குழந்தையையும் இரு தாய்மார்களிடமும் மாற்றி கொடுத்து விட்டார்.
ஆனால் குழந்தையின் தலைமுடி நீளத்தை வைத்து சந்தேகம் அடைந்த மனோன் தாயார் நர்ஸிடம் இது குறித்து கேட்டார். அதற்கு அவர் சமாதானம் சொல்லிவிடவே தன்னிடம் கொடுத்த வேறு பெண் குழந்தையுடன் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே குழந்தைகள் வளர்ந்து 10 வயது சிறுமிகளாயினர். ஆனால் மனோனின் பெற்றோருக்கு மட்டும் தங்களிடம் வளர்வது சொந்த மகள் அல்ல என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் இக்குழந்தை கறுப்பு நிறத்தில் இருந்தது.
எனவே, குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பது குறித்து பெட்டர்னிட்டி சோதனை நடத்தப்பட்டது. அதில் தங்களிடம் இருப்பது தங்களது மகள் அல்ல. குழந்தை மாறிவிட்டது என தெரியவந்தது.
அதை தொடர்ந்து இரு குடும்பத்தினரும் சந்தித்தனர். பின்னர் நடந்த டி.என்.ஏ பரிசோதனையில் மாறியது தெரியவந்தது. எனவே குழந்தைகளை மாற்றி கொடுத்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது ரூபாய் 90 கோடி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது மாற்றி வழங்கப்பட்ட குழந்தைகள் இருவரும் 20 வயதான இளம்பெண்களாக வளர்ந்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.