தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கலிஃபோர்னியாவில் ’மக்கள் தலைவர்’ விருது
சான் ஃப்ரான்சிஸ்கோ (யு.எஸ்): கலிஃபோர்னியாவின் சிலிக்கான் வேலியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ' மக்கள் தலைவர்' விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் ரமேஷ் ஜப்ரா நிறுவிய Festival of Globe அமைப்பின் சார்பில் ஃப்ரிமாண்ட் நகரில் ஆண்டு தோறும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மேடை நிகழ்ச்சிகள், கண்காட்சி, உணவுத் திடல் ஆகியவையும் இடம் பெறுகிறது.
இரண்டாம் நாள் விழாவில் அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகளில் பிரம்மாண்டமான ஊர்வலம் முக்கிய அம்சமாகும். 2016ம் ஆண்டு சுதந்திர தின விழா ஆகஸ்டு 13, 14ம் தேதிகளில் நடைபெற்றது.
சுதந்திர தினக் கொண்டாட்ட ஊர்வலத்தில் பாலிவுட்டின் குல்ஷன் க்ரோவர், ரந்தீப் ஹூடா, ரைமா சென் மற்றும் சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர் லாரா டர்னர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பாரதி தமிழ் மன்றம் சார்பில் தமிழர்கள் அலங்கார ஊர்தியுடன் பங்கேற்றனர்
ஒரு அலங்கார ஊர்தி முழுவதும் இந்தியாவின் நோபல் பரிசு வென்றவர்களின் படங்களும் தகவல்களும் மட்டுமே இருந்தது. ரபீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா, சி.வி ராமன், அமர்த்தியா சென் ஆகியோர்களின் பிரம்மாண்டமான படங்கள் பார்வையாளார்களை பரவசப் படுத்தின.
ஊர்வலத்தின் நிறைவில் நடைபெற்ற விழாவில் ஃப்ரீமாண்ட் மேயர் பில் ஹாரிஸன், துணை மேயர் லில்லி மே மற்றும் ஃப்ரீமாண்ட் சிட்டி கவுன்சில் மெம்பர்கள் பங்கேற்றனர்.
இந்தியன் கன்சுலேட் ஜெனரல் அசோக் வெங்கடேசனும் வருகை தந்திருந்தார்.
மேலும் குப்பர்டினோ துணை மேயர் சவீதா வைத்தியநாதன்கலிஃபோர்னியா அசெம்பளி உறுப்பினர்கள் பில் கிர்க், கன்சென் சூ ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
ஜெயலலிதாவுக்கு விருது
விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'மக்கள் தலைவர்' விருது வழங்கப்பட்டது.
நல்லாட்சி, மக்கள் நலத் திட்டங்கள், முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விருது குறித்து கலிஃபோர்னியாவில் வசித்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான அப்துல்லா கான், கலிஃபோர்னியா தமிழர்களின் பேராதரவுடன் முதல்வருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் புரட்சிகரமான திட்டங்களுக்கும் நல்லாட்சிக்கும் அமெரிக்கத் தமிழர்களின் பேராதரவு உண்டு என்றும் கூறினார்.
அப்துல்லா கான் தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிமுக வெற்றி, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா போன்றவைகளுக்கு அமெரிக்க ஊடகங்களில் பிரமாண்ட விளம்பரம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். முதல்வருக்கு ' மக்கள் விருது' வழங்கப்பட்டுள்ள நிலையில் மிகவும் உற்சாகத்துடன் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.
முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கிடைத்தவுடன் சென்னையில் நேரிடையாக இந்த விருதை ஜெயலலிதாவுக்கு விழாக் கமிட்டியினர் வழங்க இருப்பதாகவும் அப்துல்லா கான் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பத்தாயிரம் பேருக்கும் அதிகமாக திரண்ட இந்திய சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'மக்கள் விருது' வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.